Monday, June 30, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 2

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 2

கலிபோர்னியாவிலிருந்து நம்மூரில் ஓரிடத்துக்கு வந்து சேரக் குறைந்தது 24 மணி நேரம் ஆகும். சரி, ஒரு வழியாகச் சென்னை வந்தாயிற்று. சென்னையிலிருந்து தஞ்சைக்குப் போகும் விமானத்துக்காகக் காத்திருக்கும் இடத்தில் அன்பான குரல் ஒன்று அழைத்தது திரும்பிப் பார்த்தால் சிப்மன் (Harold Schiffman). அவருடன் இருந்த Burton Stein அவர்களை அப்போதுதான் நேரில் பார்த்தேன்; அதற்குமுன் எங்கள் எழுத்து மூலம் ஒருவருக்கொருவரைத் தெரியும். பயணக் களைப்பு சற்றே குறையத் தொடங்கியது. 


எங்களுக்காக என்று அமைந்திருந்த தஞ்சைப் பேருந்தில் பயணம். நடுவழியில் வண்டி ஓட முடியவில்லை. முதல்வரின் பயணத்துக்காகப் பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதாக ஏதோ காரணம். பிற பயணிகளுக்குச் சலிப்பு. பலருக்கும் தமிழில் உரையாடத் தெரியாது. வண்டியோட்டியிடம் கேட்டு நிலவரத்தைத் தெரிந்துகொண்டு மக்களுக்கு அமைதி சொன்னேன்! ;-) ஒரு வழியாக வந்த எல்லாரையும் வரவேற்று மாநாட்டுப் பதிவாளராக மாற்றும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். 


எங்கே எந்த ஊரில் இருக்கிறோம் என்ன நேரம் என்றெல்லாம் தெளிவாகத் தெரியாத விமானக்களைப்பு. ஆனாலும், தள்ளுகிள்ளு இல்லாமல் (!!) வரிசையில் நின்று எமக்குத் தரப்பட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே வரிசையில் நின்றுகொண்டிருந்தபோதுதான் மீனா வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரே உவகைக்கலுழ்ச்சி! யான் கொண்டுபோயிருந்த கணினி, கணினி சார்ந்த பொருட்களைப் பார்த்துவிட்டுப் பாதுகாப்புக்காக ஒரு பூட்டை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார்! நட்பென்றால் நட்பு! அதன்பின் பழைய புதிய நண்பர்கள் எல்லாருடனும் பேசி மகிழ்ந்த இடம் சாப்பாட்டுக் கூடமே

எனக்கு விமானப் பயணம் ஒத்துக்கவே ஒத்துக்காது. ஏற்கனவே தூங்காமை (insomnia, sleep apnea) என்ற நிலை. விழித்த நிலையிலும் மூச்சுவிட மறந்திடுவேன்; கண் மூடி உறங்க முயலும் நேரத்தில் மூச்சு விடவா நினைவிருக்கும்! இந்த நிலையில் எப்போது முடியுமோ அப்போது உறங்குவேன். ஆனால் மாநாடு நடந்த நாட்களில் காலை 3~4 மணிக்கேமார்கழித் திங்கள்” ஒலிபெருக்கிகளில் அலறியது. அதோடு, காலைக்கடன்களில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் வீட்டு வாயிற்கதவை யாராவது ஓங்கி ஓங்கித் தட்டி ஏதாவது அழைப்பிதழ் ஒன்றைக் கொடுப்பார்கள். 

முதல் நாளில், சரி சரியென்று சமாளித்து, காலைச் சாப்பாட்டுக்காகக் கூடத்துக்குச் சென்றபோது கணினி போன்ற பொருள்களை எடுத்துக்கொண்டு புடைவை தடுக்க யான் நடந்து போவதை ஓர் இளைஞர் பார்த்துவிட்டு உதவி செய்தார். மாநாடு முடியும்வரை அவர் செய்த அந்த வகை உதவியை என்னால் மறக்கவே முடியாது. 

தங்குவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த வீடு மிகவும் அருமையானது. ஒவ்வொரு வீட்டையும் தங்கியிருப்பவரையும் பார்த்துக்கொள்ள ஒருவர். இவர் படமும் வரும்.

ஒரு பெரிய குறை கணினிப் பயன்பாடு பரவாத காலம் அது; அதனால் யான் எடுத்துச் சென்ற கருவிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்த முடியவில்லை. கைத்தாளிலிருந்து கவிதை படித்த மாதிரி ஆகிவிட்டது என் கட்டுரை வழங்கல். இதன் விளக்கமும் படமும் வரும்.


ஒரு கொதிப்பு. வட்டமேசை போல ஒரு நிகழ்ச்சி. பங்குபெற்றவர் சில தமிழர் + பல தமிழரல்லார். என்னருகில் தமிழரல்லார் ஒருவர் (பெயர் குறிப்பிடத் தயக்கம்). ஒரு பேச்சாளர் தம் உரையில் இடையிடையே ‘சங்க இலக்கியம்’ என்ற குறிப்பை உதிர்த்தார். என் பக்கத்து நாற்காலிக்கார வெள்ளையர் ’Sangam, again!?’ என்று என் காதுபட முணுமுணுத்தார். என் கொதிநிலையை வெளிப்படுத்தப் பொதுமன்றம் ஏற்றதன்று! ஏன்தான் ஒரு தமிழச்சியாய்ப் பிறந்தேனோ, சிறுமை கண்டு பொங்கும் என் கொதிப்பே வாழ்க்கையாகிவிட்டது. கடவுளே. எனக்கும் அமைதி கொடு. 

**********************

சில படங்கள்


உல்ரிக்கெ (?) + ஆஸ்கோ




ஆஸ்கோவுடன் ...






அன்பாக விருந்து பரிமாறியவர்கள் 








சாப்பாட்டுக் கூடத்தில் என்னை ஒட்டிக்கொண்ட சில கல்லூரிப் பெண்கள். பிற பலரின் படமும் இருக்கு. 





பிற பின்னர். 

Sunday, June 29, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 1

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 1
----------------------------------------------

வணக்கம். 9-ஆம் உலகத் தமிழ் மாநாடு நடக்கப்போவது பற்றி அறிந்து மிக்க மகிழ்ச்சி. 

எந்தவொரு பகட்டும் இல்லாமல் அறிவுசார்ந்த மாநாடாக இதுவும் நடக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

1995-இல் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குச் சிறப்புப் பேராளராக அழைக்கப்பட்டிருந்தேன், சென்று இரண்டு அரங்கங்களில் என் பங்கினை வழங்கிப் பெருமிதம் அடைந்தேன்.  

பழைய நண்பர்களின் தொடர்பு மீட்சி, புதிய நண்பர்கள், எனப் பல நாட்கள் ஓடின. 

ஆனால் எல்லாத் தொடர்புமே நாங்கள் தங்கியவிடத்திலும் சாப்பிடும் இடத்திலும் மட்டுமே. மற்றபடி அவரவர் அவரவருக்கு என்று கொடுக்கப்பட்ட தனி வீடுகளில் (!உண்மை) தங்கி, குறிப்பிட்ட சிற்றஞ்சிறு பல்கலைக்கழக அறைகளில் போய் எங்கள் கட்டுரைகளை வழங்கினோம்.  

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பல; இருந்தாலும் ஒன்றிரண்டை மறக்க முடியாது. ஆஸ்கோ பார்ப்பொலாவும் அலெக்சான்டர் துபியான்ஸ்கியும் என்னைத் தேடி வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்போதுதான் சில ஆண்டுகளுக்குமுன் (1992) வெளியான என் நூலைப்பற்றி பல நல்ல சொற்கள் சொல்லி என்னைப் பாராட்டியது! இன்னும் சில வெள்ளையரும் வந்து பாராட்டினார்கள், ஆனால் அவர்களின் பெயரும் முகமும் மறந்து போச்சு! ஒரு பெண்மணி என்னிடம் வந்து ‘நீங்கள் எழுத்தாளர் சிவசங்கரியா?’ என்றார்கள்! சிரிப்பும் மகிழ்வுமாக நாட்கள் கடந்தன.


மாநாட்டில் எடுத்த படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இணையத்துக்கு ஏற்றபடி அமைத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.


1. நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்தின் முன்வாசலில். 





2. சாப்பாட்டுக் கூடத்தின் முன் வாயில். 







3. சாப்பாட்டுக் கூடத்தின் முன் வாயிலில் என் தோழி மீனாவும் யானும்.





4. சாப்பாட்டுக் கூடத்தில் ...









பிற பின்னர்.

(தொடரும்)