Thursday, September 27, 2012


கூட்டு -- தக்காளிக்காய்க் கூட்டு
----------------------------------------------------

பழுக்காத, நல்ல காயாக உள்ள தக்காளிதான் இதற்கு ஏற்றது. இங்கே தெற்கு மாநிலங்களில் தக்காளிக்காய்ச் சமையல் புகழ் வாய்ந்தது. பெரும்பாலும் பஜ்ஜிபோலச் சமைப்பார்கள். வட கலியில் தக்காளிக்காய் கிடைப்பது அரிது. அதனால் ... கிடைத்த பழுக்காத "வாரிசுத் தக்காளி"யைப் ("heirloom tomatoes") பயன்படுத்தினேன்! "வாரிசுத் தக்காளி" என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்: http://en.wikipedia.org/wiki/Heirloom_tomato 

மிகவும் சுவையான கூட்டு கிடைத்தது!

செய்முறை
----------------

1. தக்காளிக் காய்களைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.



2. காய்களைப் பெரிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.



3. இரண்டு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல் (பச்சை/உலர்ந்தது எதுவானாலும் சரி), 2~3 மிளகாய் வத்தல் (சுவைக்கு ஏற்றபடி), 1/4 தேக்கரண்டி சீரகம் ... இவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். முதலில் தேங்காய்த் துருவலை வறுத்தால், வத்தலையும் சீரகத்தையும் வறுக்க எண்ணெய் விடத் தேவையில்லை. தேங்காயின் எண்ணெய்ப் பசை போதும்.  


4. வறுத்த பொருள்களைக் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளலாம்; அல்லது, தண்ணீர் விடாமலே சின்ன திரிவையில் (காப்பிக்கொட்டை திரிக்கும் அரைவையில்) திரித்துக் கொள்ளலாம்.


இப்போது "மசாலா" தயார்!

5. நறுக்கிய காய்த் துண்டங்களைச் சிறிது உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து, சிறிது தண்ணீரில் ரொம்பவும் குழையவிடாமல் வேகவைக்கவும்.


6. காய்கள் பாதி (al dente, கடி பதத்தில்) வெந்தவுடன் அரைத்து/திரித்து வைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து மிகவும் சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

7. கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை தாளித்துக் கலக்கவும். சுவையான தக்காளிக்காய்க் கூட்டு தயார்!




8. அலங்காரமாகச் செர்ரித் தக்காளிப் பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.



பி.கு: காயை ரொம்ப நேரம் வேகவைத்தால் குழைந்துபோகும். அப்படியானால், சூப் போலச் செய்தும் சாப்பிடலாம். சாதாரணத் தக்காளிக் காயில் இருக்கும் கடுப்புச்சுவை இந்த "வாரிசு"த் தக்காளியில் இல்லை. சிறிது இனிப்பும் புளிப்புமாக மிக நன்றாக இருந்தது. :-)

Saturday, September 15, 2012

பாதையோரப் பரிசு ... (4) 


அன்று ஒரு நாள் காலையில் வெளியே நடந்து சென்றபோது ... மெக்னோலியா (magnolia) மரங்களிடம் கேட்டுக்கொண்டே நடந்தேன்: 'ஊர்லெ ஒரு தம்பி இருக்கு; அதுக்கு ஒன் பூவெப் பாக்கணுமாம். என் கண்ணுலெ ஒரு பூவைக் காட்டேன்' என்று. ஆ! என் வேண்டுதலுக்குச் செவியையும் பூவையும் சாய்த்தது ஒரு மரம்! கண்ட காட்சி ... இங்கே முதல் படத்தில்.


1. ஒரு மெக்னோலியாப் பூ (magnolia) முனைவர் காளைராசனுக்காகவே என் கைக்கு எட்டும் தொலைவில் பூத்திருந்தது!!!




2.   நாங்க இந்த ஊர் அரளிப்பூவாக்கும் ...




3. ஒங்க ஊர்லெ எங்களுக்கு நல்ல பேர் இல்லெ (பீரோஜா/பீநாறி-னுவீங்க). ஆனா, இங்கே நாங்க நல்லாவே இருக்கோம்!




4. பாரு பாரு, என் தங்க நெறத்தெப் பாரு!



5.   நாங்க புதுசா ... புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ...




அட ... இவ்ளோ சீக்கிரமா ... குடும்பம் பெருகிப்போச்சா?!!!



6. பூச்சாண்டி மாதிரி ஒரு முகம் தென்படுகிறதா? 



ஆனா, நாங்க எல்லாரும் பூச்சாண்டியில்லெ!




7. என் வீட்டு வாசற்படிக்கு அருகில், சின்ன செடியில். நல்ல மணம்! ஆனால் ... வண்டிகளின் புகை புழுதிகளுக்கு இடையில் அந்த மணத்தை நுகரத் தனி நயம் வேண்டும்!




8. கால மாற்றத்தைத் தெரிவிக்கும் வானிலை அறிக்கையாளர்கள்!