Wednesday, December 14, 2011

வான் வழிச் செலவில் உணவு ...

1. உணவு வந்தது ... . மேலே இருந்தவை "பரோட்டா"த் துண்டுகள்.




2. பிரி பிரி என்று அந்த அலுமினியத் தாளைப் பிரித்துப் பார்த்தேன். காராமணிப்பயறுபோல ஒன்று, பருப்புசாதம்போல ஒன்று, சுவை குலைக்கப்பட்ட பழுப்புக்கீரை, அதோடு உருளைக்கிழங்கோ எதோ ஒன்று.



3. ஏதோ ஒரு ஊறுகாயும் கிடைத்தது! உப்பு வேண்டாம் என்றால் இதைத் தொடக்கூடாது!



4. நல்ல சத்துள்ள உணவு ஒன்றும் கிடைத்தது.



5. பழம்/பாலடைக்கட்டி (cheese) வேண்டுமா? அதுவும் வந்தது.



6. தாதியரின் புன்சிரிப்பும் கிடைத்தது!



7. மொத்தத்தில் ... அருமையான ... செலவு அதிகமான ... பயணம்! இனிது, இனிது வாழ்க்கை தரும் வாய்ப்பு இனிது!

Friday, November 4, 2011

ஆர்ட்டிச்சோக் (artichoke) ...

என்ற ஒரு காயை 20 ஆண்டுகளுக்குமுன் நான் பார்த்ததில்லை.

கலியில் இது கடைகளிலும் கிடைக்கும், வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்க முடியும்.

இதைப் பற்றிய விவரம் இங்கே பார்க்கலாம்: http://en.wikipedia.org/wiki/Artichoke

சத்து நிறைந்த இந்தக் காய் விலை கூடுதலாக இருந்தாலும் ஒருமுறையாவது வாங்கிச் சமைத்துச் சுவைத்துவிடவேண்டும்!

உயர்தர உணவகங்களில் இதை ஒரு "அரும்பொருளாக"ச் சமைத்துப் பரிமாறுவதும் விற்பதும் உண்டு -- வறுவலாக, பொறியலாக, ஊறுகாயாக
 
++++++++++++++++++++++++++++++++

வீட்டில், எளிமையான முறையில், ஆர்ட்டிச்சோக் வேகவைத்துச் சுவைக்கும் முறை:

1. நல்லா குண்டு குண்டு-னு இருக்கிற காய் வாங்குங்க.


2. நுனிப்பகுதியை நறுக்கி எடுத்திடுங்க ...



3. ஒரு பெரிய சட்டிலெ நெறயத் தண்ணிவிட்டு, நறுக்கின காய்ப்பகுதிகளெப் போட்டு, ஒரு துணியையும் காய்க்குமேலெ மூடினமாதிரிப் போட்டு, வேகவச்சு எடுங்க. துணி போட்டு மூடுறது எதுக்கு-னா ... காய் வேகும்போது மிதந்து ஒரு பகுதி வேகாமப் போகாம சரியா வேகத்தான்.



4. அப்புறம்? வெளிப்புறத்திலெருந்து ... ஒவ்வொரு இதழ் இதழா ... பிரிச்சு எடுத்து ... நம்ம ஊர் முருங்கக்காயெச் சப்பி உறிஞ்சிச் சாப்பிடுவோமில்லெ ... அந்த மாதிரி ... பல்லாலே உருவி உள்ளெ இருக்கிறெ சத்தெ எடுத்துச் சுவைக்கணும்! :-) காம்பு/தண்டுப் பகுதி ரொம்ப நல்லாவே இருக்கும்! 

மீதிச் சக்கை இப்பிடி ... மிஞ்சும்! இது தோட்டத்து உரக்குப்பைக்குப் போகும்.


5. அது மட்டுமில்லெ ... . மதுரெக் கோயிலுக்குப் போறவங்க மொதல்லெ ஆடிவீதி சுத்திட்டு, அப்புறம் உள்ளெ போயி ... கருவறைக்குள்ள நிக்கிற மீனாட்சியெப் பாத்துக் கும்பிட மாதிரியே செய்யோணும்.

வெளிலெ சுத்தி இருக்கிற இதழ் எல்லாத்தெயும் கழட்டிட்டு (== அதாவது சவைத்துத் சுவைத்ததுக்கு அப்புறம்) உள்ளெ போகும்போது கொஞ்சம் நிதானமாப் போகணும். ஏன்னா ... உள்ளுக்கும் உள்ளெ இருக்கிற சத்தெச் சுத்தி பஞ்சுபோல, ஆனா, முள் இருக்கும். அந்த முள்ளெ எடுத்திட்டா ... உள்ளெ இருக்ற சத்தைச் சுவைக்கலாம்! :-)

உட்புறச் சத்தைச் சுற்றி முள் இருக்கும் பகுதிகள், இரண்டு காய்களிலிருந்து ...



முள் பகுதியை ... அப்படியே லாவகமா ... எடுத்திட்டா ... உள் சத்து தனியே கழண்டு வந்திடும்!

ஒப்புமைக்குப் பாருங்க ...


மேல் படத்தில் ... இடது பக்கம் இருப்பது உள் சத்து. வலது புறம் இருப்பது முள்.


6. சத்தான சத்தல்லவோ ...



குறிப்பு: இதில் உப்பு, உறைப்பு எதுவும் சேர்க்காமல் சுவைப்பதே எனக்குப் பிடிக்கும். அப்படியானால்தான் இதன் முழு antioxidant பயனையும் பெறலாம். உயர்தர உணவகங்களிலும் கடைகளிலும் கிடைக்கும் ஆர்ட்டிச்சோக் ... வேண்டுமானால் ... ஒரு மாலைப்பொழுது, ஒரு expensive date-உடன் தரலாம்; ஆனால் ... அதன் அடிப்படைச் சுவையும் பயனும் காணாமல் போய்விடும்! :-)  



Monday, October 24, 2011

தேன்குழல் ...

செய்தேனே ... !!

1. முதலில் ... பிள்ளையாருக்கு ... பிள்ளையார் மாவு ...



2. அச்சு வழியே பிழிபட்டு ... எண்ணெயில் மிதக்கும் குழல் ...



3. கர கர ... குழல்கள் ...




இங்கே முன்புறம் வெள்ளை வெளேர் என இருப்பதுதான் "அரை வேக்காட்டு"க் குழல்; மெது மெது என்று ... ஒரு "கிழவி"போல் தளர்ந்துபோய் ... மென்மையாக .... ஆனால் மிகவும் சுவையாக இருக்கும்!



வேறு வழியில்லாமல் ... சும்மா ... அரிசி மாவையும் உளுந்து மாவையும் கலந்து செய்தேன்! நல்லாவே வந்தது! வல்லவ[னு/ளு]க்குப் புல்லும் ஆயுதம்???

ஒரு பெரீஇஇய இது .. என்ன-னா ... இதிலெ வெண்ணெய் கலக்கவே இல்லே. வீகன் (vegan) முறை!


Saturday, October 22, 2011

இது ஒரு வகைப் பறங்கி ...

இதன் பெயர் butternut squash. தமிழில் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள்! :-)

இது இப்படி இருக்கும் -- சுரைக்காய் வடிவம், ஆனால் தடித்த தோலும் பறங்கிக்காய் போல மஞ்சள் நிறமான உட்புறமும் கொண்டது.



இதை இரண்டு பகுதியாக வெட்டி, "அவனுக்குள்" (oven) வைத்து, 350 degree சூட்டில் ஒரு மணி நேரத்திற்கும் சிறிது மேலாகச் சுட்டேன்.





பிறகு, ஒரு காகிதப் பையில் போட்டு ஆறவைத்தேன்.



வெளியே எடுத்து, தோலை உரித்து, உட்புறச் சத்தை எடுத்தேன்.



சுவை அருமை! இதை அப்படியே விழுங்கலாம்! அல்லது மற்ற வகைகளிலும் பயன்படுத்தலாம்!  
பிற பின்னர்! :-) :-) :-)

செஞ்சோளம்!

ஆமாம், பல வகைச் சோளம் இங்கே கிடைக்கும். பல இடங்களில் அவை காய்த்து முதிர்ந்த நிலையிலேயே கிடைக்கும்.  

இந்த முறை செஞ்சோள வகை ஒன்று ... காயாமல் பச்சையாகக் கிடைத்தது ... உழவர் சந்தையில் இல்லை, ஆனால் ஒரு நல்ல கடையில் ...


பிரித்துப் பார்த்தேன் ...

உரித்துப் பார்த்தேன் ....

செம்முத்து எடுத்துச் சேர்த்தேன் பிற காய்க் கலவையில்  ...
கண்ணுக்கும் கருத்துக்கும் சுவைக்கும் உடல் நலத்துக்கும் இனியது! இயற்கை அழகுக்கும் சுவைக்கும் நலத்துக்கும் நன்றி!

Thursday, October 6, 2011

அது அந்தக் காலம் - 3

பாத்திமாக் கல்லூரி, விளாங்குடி வளாகத்தில் கல்லூரி முதல் ஆண்டுவிழா (1958-1959). சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு ஏ. இலட்சுமணசாமி முதலியார் விளக்கேற்றிவைத்துத் தொடங்கினார்.






Saturday, September 24, 2011

அது அந்தக் காலம் - 2

1. ஆன் ஆர்பரில் (Ann Arbor, Michigan; 1981?) ... தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு  ஆர்வலரின் சிறு கூட்டம்; முதல் முயற்சி. நான் குடியிருந்த சிறு வீட்டில் ... 2~3 நாட்கள். நேரம் போவது தெரியாமல் ... களைப்படையாமல் ... பேசி, விவாதித்து, மொழிபெயர்த்து ... மிக அருமையான நிகழ்வு! 

இடமிருந்து வலமாக: டேவிட் பக், பௌலா ரிச்மன், நான், நார்மன் கட்லர்.

அந்தக் கூட்டத்தின்போதுதான் இறையனார் களவியல் பற்றிச் சொன்னேன்; மொழிபெயர்க்கப்படவேண்டும் என்று. டேவிட் பக் பின்னாளில் அதைச் செய்துமுடித்தார். பௌலா ரிச்மன் முனைவர் பட்டத்திற்கு மணிமேகலை ஆய்வு. பின்னாளில் ... பிள்ளைத்தமிழ். பிறகு பலவகை இராமாயணம். நார்மன் கட்லர் ஏ. கே. ராமானுஜன் அவர்களின் அருமை மாணவர். திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இளவயதில் இறந்துவிட்டார். தமிழுக்கு மேலும் ஓர் இழப்பு.

2. பிலடெல்பியா (1982-க்குப் பிறகு). ஆசிய இலக்கிய மாநாட்டில் தமிழ்ப் பிரபந்தங்கள் பற்றிய கருத்தரங்கு.

இடமிருந்து வலம்: நான் (கருத்தரங்குத் தலைமை; பேசியது உலா இலக்கியங்கள் பற்றி), நார்மன் கட்லர் (பேசியது  திருக்கோவையார் பற்றி), பௌலா ரிச்மன் (பேசியது பிள்ளைத்தமிழ் பற்றி), டேவிட் ஷுல்மன் (பேசியது பரணி பற்றி). அருமையான கருத்தரங்கு!


3. வாஷிங்டனில்.


டேவிட் ஷூல்மன் அருகில் இருக்கும் பையில் ... சுந்தரர் தேவாரம் -- அவருடைய மொழிபெயர்ப்பு ... உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில். நூல் வெளியிடப்பட்டது 1990-இல். டேவிட் போல் முனைந்து தேவாரத்தைப் படித்தவரைக் கண்டதில்லை.

Friday, September 23, 2011

காலம் மாறுது ...

இங்கே "இலை உதிர் காலம்" தொடங்குகிறது. மனிதர் வகுத்த கால அட்டவணைக்கு ஏற்றபடி, ஒரு குறிப்பிட்ட நாளில் இயற்கை தன் வடிவை மாற்றிக்கொள்ளத் தொடங்காது. இயற்கையின் மாற்றம் தொடர்ச்சியைக் காட்டும்.

1. என் வீட்டு முன் இருக்கும் மரம் காட்டும் இலை அழகு ... கால மாற்றத்தின் அறிகுறி ...

 

சில நாட்களில் இன்னும் சில மாற்றம் ...




2. எதிரே இருக்கும் மெக்னோலியா (magnolia) மரத்தில் ... எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பூ ...




3. வீட்டில் பிழைத்துத் தழைத்துவரும் சிறு மஞ்சள் (?) / மாங்காய் இஞ்சி (?) ...





4. கருவெப்பிள்ளெ (!) / கறிவேப்பிலை ... . எத்தனைச் செடிகள் இருந்தாலும் போதாது ... . தழை தழை என ஒன்றே வேண்டுவது!





5. இவர்கள் யார் என்று தெரியவில்லை ... கம்பு, தினைகளைத் தூவியதின் விளைவு!






6. இவள் யார் என்று திட்டமாகத் தெரியவில்லை. பெரும்பாலும் கேன்டலோப் (cantaloupe) ஆக இருக்கலாம். இவள் தளிர் விட்டிருக்கிறாள் என்று இவளுக்கு நான் சொல்லணுமா? இல்லை, "நான் தளிர்த்திருக்கிறேன், கொம்பு தா" என்று இவள் எனக்குச் சொல்லுகிறாளா? என்ன செய்வேன் இந்தக் குப்பைக் கொழுந்தை?



கால மாற்றமும் நல்லதுதானே!


Thursday, September 22, 2011

தலைக்கு மேலே ...



1. வேலைக் கூடு (cube) ...




2. தலைக்கு நேர் மேலே ...



எந்த நேரம் அந்தக் கடப்பாரை (== இரும்புத்தடி) கீழே விழுமோ என்ற அச்சத்திலேயே வேலைபார்த்த நாட்கள் ...


Wednesday, September 21, 2011

தலைப்பு இல்லாதது ... - 1

தலைப்பு இல்லை, ஏன் என்றால் இந்தக் கருத்துக்கு வரையறை கொடுக்க இயலவில்லை.
  
பறிக்காமல் ... பார்த்து மட்டுமே நான் பழகி வணங்கும் மலர்கள் என் சிறு தோட்டத்தில்.

பேசாமல் பேசும் இவர்களின் உணர்வு வெளிப்பாட்டைச் சில சமயம் தாங்கிக்கொள்ள முடியாது!

என்னால் எதுவும் செய்ய முடியாது, ஆனாலும் அவர்களுடன் பேசுவேன், அவர்களைக் கொஞ்சுவேன்; கையில் முள் ஏறியதும் உண்டு!

சில நண்பர்களை மட்டும் இங்கே இணைய நண்பர்களுக்காக ... அறிமுகம்.

1. மாயோன் கைச்சங்கு என்னிடம் இருந்து போனதுதான்!


2. நாணம் ...



3. வருத்தம் ...



4. சிலிர்ப்பு ...


  
5. பணிவு ...


6. அரவணைப்பு ...


7. வெறியாட்டம் ...


(தொடரும்...)