Thursday, January 24, 2013

கடலே, எம்மைக் காக்கும் துணையே ...

கடல் என்றால் அதன் சிறப்பு பலருக்கும் தெரியாது. கடற்கரை என்றால் பலருக்கும் அது ஒரு பொழுதுபோக்கும் இடமாகப் பயன்படுகிறது.  


அந்தக் கடல் வற்றினாலோ சீறினாலோ மக்களுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் உண்டாகும் துன்பம் பல.


நிலவகையால் பிரிந்திருக்கும் இடங்களை இணைப்பது கடல்தானே!

கொஞ்ச நேரம் ஒரு கடற்கரையில் ஒரு தனித்த இடத்தில் உட்கார்ந்து அந்தக் கடலையே பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் -- ஆன்மிகம் உங்கள் கையில் அடக்கம். வேறு வகைத் தியானம் தேவையில்லை. நம் உள்மனத்தை அப்படியே வெளிக்காட்டி உறவாடும் அந்தக் கடல்.

கடற்கரை மணலில் நடக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். இங்கே பக்கத்தில் மோன்டெரே (Monterey) கடற்கரையில் சில நாட்கள் செலவழிக்கும் பேறு கிட்டியது. அப்போது எடுத்த சில படங்கள் இங்கே.


1. இப்போதுதான் என் நாள் தொடங்குகிறது.  

 


2. இரவில் போன மீனவரோ யாரோ வீடு திரும்புகிறார்கள்.  




3. நடு மதியம். ஒரே குதூகலம்.


4. என் பாதுகாப்பாளர்.




5. அலுவலகம் போய்த் திரும்பும் அலுப்புடன் ...


6. அது சரீ, அவன் எங்கெ போய்த் தொலைஞ்சான்? அப்பா, அம்மா, மனைவியின் காத்திருப்பு ...

  

7. அவ எங்கெ போனா?

  

8. எல்லாரும் ஒங்க ஒங்க ஊட்டுக்குப் போங்க.
 


  
  
  

9. நான் குளிச்சிட்டுத் தூங்கப்போறேன். நாளெக்கிப் பாப்பம்.


Monday, January 14, 2013

பொங்கல் -- ஒரு சிறுதானியப் பொங்கல் ...

அரிசியில்தான் பொங்கல் செய்வது வழக்கம், இல்லையா?  

கொஞ்சம் மாற்றித்தான் ஒரு பொங்கல் செய்து பார்க்கலாமே என்று எப்பவுமே நினைப்பேன். முடிந்தபோதெல்லாம் அப்படியே செய்வேன், ஏதாவது ஒரு சிறுதானியத்தை வைத்து -- வெண்பொங்கலோ சர்க்கரைப் பொங்கலோ.
  
இந்த முறை ரொம்பச் சீக்கிரமாக, கையில் இருந்த ஒரு சிறுதானியத்தை வைத்துப் பொங்கல் செய்ய நினைத்தேன். அதன் விளைவே இந்தப் பதிவு.  

எப்போதுமே புதிய காய், கூல வகைகளைப் பார்த்தால் வாங்கிச் சமைத்துப் பார்த்துவிடுவேன். அண்மையில் ஒரு சிறுதானியம் என் கண்ணுக்குத் தென்பட்டது. இதன் தமிழ்ப்பெயர் எனக்குத் தெரியவில்லை. வெள்ளை வெளேர் என்று இருந்தது. இதை ஆங்கிலப் பெயரில் (Indian Sawa Millet) விற்பனை செய்கிறார்கள். படமும் பொங்கல் செய்முறையும் இங்கே:  
  
  
1. சிறுதானியம்
  

 
  
  
தொட்டால் ... பட்டுப்போன்ற மென்மை.

  
  
2. ஒரு சிறிய கிண்ணத்தில் அரைக்கிண்ணம் இந்த Indian Sawa Millet-ஐயும் ஒரு கால் கிண்ணம் பாசிப்பருப்பையும் எடுத்துக்கொண்டேன்.
  
3. வறுக்கக்கூட இல்லை. நன்றாகக் கழுவி இரண்டையும் ஒரு நல்ல பாத்திரத்தில் போட்டுக் குழைய வேகவைத்தேன்.  
  
4. நன்றாக வெந்த பிறகு, கொஞ்சம் சோயாப் பாலும் கொஞ்சம் வீகன் (vegan) சர்க்கரையும் சேர்த்துக் கிளறினேன்.
  
5. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு தேக்கரண்டி (teaspoon) அளவுக்குக் கலப்படமில்லாத மிக நல்ல தேங்காயெண்ணெய் (organic virgin coconut oil) ஊற்றிக் கிளறினேன்.
  
6. பொங்கல் பதத்துக்கு வந்ததும் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி, உலர்ந்த முந்திரிப்பழம் (raisins), பைன் கொட்டைகள் (pine nuts) சேர்த்தேன்.
  
7. அருமையான, சுவையான பொங்கல் கிடைத்தது! 



  
குறிப்பு: இதை வெண்பொங்கலாகவும் செய்யலாம். இங்கே, மக்கள் வழக்கமாகச் சேர்க்கும் பசும்பாலோ, நெய்யோ, எலும்பு மற்ற விலங்குப் பொருள் கலந்து தீட்டப்பட்ட (processed) சர்க்கரையோ சேர்க்கவில்லை. அரிசிச் சமையல் தரும் "திம்" "கம்" போல வயிற்றை உப்ப வைக்கும் கனம் இல்லை. செய்து, சுவைத்துப் பார்க்கவும்.

காய், காய், என்ன காய் செய்யலாம்? கழுதை கெட்டா ...

கழுதை கெட்டா ... குட்டிச்சுவர்! தெரியும்.

அதே போல ... என்ன சமைக்க? என்ன இருக்கு? என்று தேட நேரமில்லாமல் போகும்போது ... கைகொடுக்கும் தெய்வச் சமையல் -- ஒரு வகைக் கறி!

1. கொஞ்சம் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி எடுத்துக்கொண்டு தனியாகக் கடுகு தாளித்துச் சேர்க்கவும்:



2. வெந்த பயறு வகை ஒன்றை எடுத்துக் கொள்ளவும். இங்கே உள்ளது பின்ட்டோ பீன்ஸ் (pinto beans).
      (காய்ந்த பயிறு இருந்தால் ஊறவிட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதுவே இங்கே.)



3. பச்சைக் காய் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இங்கே பயன்படுத்திய காயின் பெயர் ப்ரோக்கலி (broccoli).


  
4. மேற்கண்ட பச்சைக்காய்த் துண்டுகளை மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும். குழையவிடவேண்டாம். பச்சை நிறம் மாறக்கூடாது.


5. தக்காளிக் கலவையில் பருப்பும் பச்சைக் காயும் சேர்த்துச் சிறிது நேரம் ( ~15 மணித்துளிகள்) வேகவைக்கவும்.



6. தேவையானால் சிறிது உப்பும் பெருங்காயமும் வதக்கிய இஞ்சியும் சேர்த்துக்கொள்ளவும்.

7. பச்சைக் கறிவேப்பிலை இதழ்களையும் சேர்க்கலாம்.

குறிப்பு: பருப்பும் (beans) ப்ரோக்கலியும் சிலருக்கு வாயுத் தொந்தரவு கொடுக்கலாம். அதனால் இஞ்சியும் பெருங்காயமும் சேர்ப்பது உதவும். பூண்டும் சேர்க்கலாம்.

சத்துள்ள உணவு. சப்பாத்தி, ரொட்டி, சோறு போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம். அளவோடு சுவைத்து உண்டு மகிழ்ந்து பயன் பெறுக!