Wednesday, July 2, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 3

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 3
----------------------------------------------

(தொடர்ச்சி)

இரண்டாம் நாள் காலை. உறக்கமில்லாத நிலையில் எழுந்திருந்து பொதுவாழ்வுக்காகத் தயாராகி, தங்கியிருந்த வீட்டிலிருந்து சாப்பாட்டுக் கூடத்துக்குப் போகும் வழியில் ஒரு பெரிய கூட்டம். பிறபுல அம்மையார் (மலேசியா? சிங்கப்பூர்?) ஒருவர் “We have to boycott this conference” என்று ஆங்கிலத்திலும் மலேசியத் தமிழிலுமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். என்னவென்று தெளிவாகப் புரியவில்லை. அப்போது புரிந்துகொள்ள நேரமும் இல்லை. பின்னாளில் தெரிந்தது உண்மையோ இல்லையோ என்று தெரியவில்லை. பிற நாட்டுத் தமிழர் சிலருக்கு ‘வீசா’ கிடைக்காத நிலையாம். 

********************

யான் தங்கியிருந்த இடத்திலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்துக்கு எங்களைக் கொண்டு செல்ல மிக நல்ல வண்டிகள். 

நல்ல பாதுகாப்பான வரவேற்பு. உள்ளே போனதும் அவரவர் விருப்பப்படி அரங்கங்களில் நுழைந்து செவிக்குணவு பெற்றோம். இடையூறுகள் குறைவு.

மாநாட்டைத் தொடங்கிவைத்த நிகழ்ச்சிகள் வெட்ட வெளியில், நல்ல பாதுகாப்போடு, அமைந்தன.

சில படங்கள் இங்கே:



1. மாநாட்டு அரங்குக்குப் போகும் வழி.





2. மாநாட்டு முகப்புப் பந்தல். 





3. மாநாட்டுக் காப்பாளர்.







4. முதல்வரின் திறப்புக்காகக் காத்திருக்கும் மக்கள்.








5. முதல்வரின் திறந்துரை. 



(தொடரும்)


Monday, June 30, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 2

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 2

கலிபோர்னியாவிலிருந்து நம்மூரில் ஓரிடத்துக்கு வந்து சேரக் குறைந்தது 24 மணி நேரம் ஆகும். சரி, ஒரு வழியாகச் சென்னை வந்தாயிற்று. சென்னையிலிருந்து தஞ்சைக்குப் போகும் விமானத்துக்காகக் காத்திருக்கும் இடத்தில் அன்பான குரல் ஒன்று அழைத்தது திரும்பிப் பார்த்தால் சிப்மன் (Harold Schiffman). அவருடன் இருந்த Burton Stein அவர்களை அப்போதுதான் நேரில் பார்த்தேன்; அதற்குமுன் எங்கள் எழுத்து மூலம் ஒருவருக்கொருவரைத் தெரியும். பயணக் களைப்பு சற்றே குறையத் தொடங்கியது. 


எங்களுக்காக என்று அமைந்திருந்த தஞ்சைப் பேருந்தில் பயணம். நடுவழியில் வண்டி ஓட முடியவில்லை. முதல்வரின் பயணத்துக்காகப் பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதாக ஏதோ காரணம். பிற பயணிகளுக்குச் சலிப்பு. பலருக்கும் தமிழில் உரையாடத் தெரியாது. வண்டியோட்டியிடம் கேட்டு நிலவரத்தைத் தெரிந்துகொண்டு மக்களுக்கு அமைதி சொன்னேன்! ;-) ஒரு வழியாக வந்த எல்லாரையும் வரவேற்று மாநாட்டுப் பதிவாளராக மாற்றும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். 


எங்கே எந்த ஊரில் இருக்கிறோம் என்ன நேரம் என்றெல்லாம் தெளிவாகத் தெரியாத விமானக்களைப்பு. ஆனாலும், தள்ளுகிள்ளு இல்லாமல் (!!) வரிசையில் நின்று எமக்குத் தரப்பட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே வரிசையில் நின்றுகொண்டிருந்தபோதுதான் மீனா வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரே உவகைக்கலுழ்ச்சி! யான் கொண்டுபோயிருந்த கணினி, கணினி சார்ந்த பொருட்களைப் பார்த்துவிட்டுப் பாதுகாப்புக்காக ஒரு பூட்டை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார்! நட்பென்றால் நட்பு! அதன்பின் பழைய புதிய நண்பர்கள் எல்லாருடனும் பேசி மகிழ்ந்த இடம் சாப்பாட்டுக் கூடமே

எனக்கு விமானப் பயணம் ஒத்துக்கவே ஒத்துக்காது. ஏற்கனவே தூங்காமை (insomnia, sleep apnea) என்ற நிலை. விழித்த நிலையிலும் மூச்சுவிட மறந்திடுவேன்; கண் மூடி உறங்க முயலும் நேரத்தில் மூச்சு விடவா நினைவிருக்கும்! இந்த நிலையில் எப்போது முடியுமோ அப்போது உறங்குவேன். ஆனால் மாநாடு நடந்த நாட்களில் காலை 3~4 மணிக்கேமார்கழித் திங்கள்” ஒலிபெருக்கிகளில் அலறியது. அதோடு, காலைக்கடன்களில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் வீட்டு வாயிற்கதவை யாராவது ஓங்கி ஓங்கித் தட்டி ஏதாவது அழைப்பிதழ் ஒன்றைக் கொடுப்பார்கள். 

முதல் நாளில், சரி சரியென்று சமாளித்து, காலைச் சாப்பாட்டுக்காகக் கூடத்துக்குச் சென்றபோது கணினி போன்ற பொருள்களை எடுத்துக்கொண்டு புடைவை தடுக்க யான் நடந்து போவதை ஓர் இளைஞர் பார்த்துவிட்டு உதவி செய்தார். மாநாடு முடியும்வரை அவர் செய்த அந்த வகை உதவியை என்னால் மறக்கவே முடியாது. 

தங்குவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த வீடு மிகவும் அருமையானது. ஒவ்வொரு வீட்டையும் தங்கியிருப்பவரையும் பார்த்துக்கொள்ள ஒருவர். இவர் படமும் வரும்.

ஒரு பெரிய குறை கணினிப் பயன்பாடு பரவாத காலம் அது; அதனால் யான் எடுத்துச் சென்ற கருவிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்த முடியவில்லை. கைத்தாளிலிருந்து கவிதை படித்த மாதிரி ஆகிவிட்டது என் கட்டுரை வழங்கல். இதன் விளக்கமும் படமும் வரும்.


ஒரு கொதிப்பு. வட்டமேசை போல ஒரு நிகழ்ச்சி. பங்குபெற்றவர் சில தமிழர் + பல தமிழரல்லார். என்னருகில் தமிழரல்லார் ஒருவர் (பெயர் குறிப்பிடத் தயக்கம்). ஒரு பேச்சாளர் தம் உரையில் இடையிடையே ‘சங்க இலக்கியம்’ என்ற குறிப்பை உதிர்த்தார். என் பக்கத்து நாற்காலிக்கார வெள்ளையர் ’Sangam, again!?’ என்று என் காதுபட முணுமுணுத்தார். என் கொதிநிலையை வெளிப்படுத்தப் பொதுமன்றம் ஏற்றதன்று! ஏன்தான் ஒரு தமிழச்சியாய்ப் பிறந்தேனோ, சிறுமை கண்டு பொங்கும் என் கொதிப்பே வாழ்க்கையாகிவிட்டது. கடவுளே. எனக்கும் அமைதி கொடு. 

**********************

சில படங்கள்


உல்ரிக்கெ (?) + ஆஸ்கோ




ஆஸ்கோவுடன் ...






அன்பாக விருந்து பரிமாறியவர்கள் 








சாப்பாட்டுக் கூடத்தில் என்னை ஒட்டிக்கொண்ட சில கல்லூரிப் பெண்கள். பிற பலரின் படமும் இருக்கு. 





பிற பின்னர். 

Sunday, June 29, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 1

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 1
----------------------------------------------

வணக்கம். 9-ஆம் உலகத் தமிழ் மாநாடு நடக்கப்போவது பற்றி அறிந்து மிக்க மகிழ்ச்சி. 

எந்தவொரு பகட்டும் இல்லாமல் அறிவுசார்ந்த மாநாடாக இதுவும் நடக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

1995-இல் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குச் சிறப்புப் பேராளராக அழைக்கப்பட்டிருந்தேன், சென்று இரண்டு அரங்கங்களில் என் பங்கினை வழங்கிப் பெருமிதம் அடைந்தேன்.  

பழைய நண்பர்களின் தொடர்பு மீட்சி, புதிய நண்பர்கள், எனப் பல நாட்கள் ஓடின. 

ஆனால் எல்லாத் தொடர்புமே நாங்கள் தங்கியவிடத்திலும் சாப்பிடும் இடத்திலும் மட்டுமே. மற்றபடி அவரவர் அவரவருக்கு என்று கொடுக்கப்பட்ட தனி வீடுகளில் (!உண்மை) தங்கி, குறிப்பிட்ட சிற்றஞ்சிறு பல்கலைக்கழக அறைகளில் போய் எங்கள் கட்டுரைகளை வழங்கினோம்.  

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பல; இருந்தாலும் ஒன்றிரண்டை மறக்க முடியாது. ஆஸ்கோ பார்ப்பொலாவும் அலெக்சான்டர் துபியான்ஸ்கியும் என்னைத் தேடி வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்போதுதான் சில ஆண்டுகளுக்குமுன் (1992) வெளியான என் நூலைப்பற்றி பல நல்ல சொற்கள் சொல்லி என்னைப் பாராட்டியது! இன்னும் சில வெள்ளையரும் வந்து பாராட்டினார்கள், ஆனால் அவர்களின் பெயரும் முகமும் மறந்து போச்சு! ஒரு பெண்மணி என்னிடம் வந்து ‘நீங்கள் எழுத்தாளர் சிவசங்கரியா?’ என்றார்கள்! சிரிப்பும் மகிழ்வுமாக நாட்கள் கடந்தன.


மாநாட்டில் எடுத்த படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இணையத்துக்கு ஏற்றபடி அமைத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.


1. நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்தின் முன்வாசலில். 





2. சாப்பாட்டுக் கூடத்தின் முன் வாயில். 







3. சாப்பாட்டுக் கூடத்தின் முன் வாயிலில் என் தோழி மீனாவும் யானும்.





4. சாப்பாட்டுக் கூடத்தில் ...









பிற பின்னர்.

(தொடரும்)

Sunday, March 2, 2014

முந்தாநாள் மழை ..

முந்தாநாள் மழை ..
------------------------
மதுரையில் வளர்ந்த காலத்திலும் சரி, பின்னாளில் வெளிநாட்டில் பணியாற்றிய காலத்திலும் சரி, மழைக்காலத்தையும் பனிக்காலத்தையும் இன்றுபோல் அன்று சுவைத்தேன் என்று சொல்ல முடியாது. அதுக்குப் பெரிய காரணம் பெண்களாகிய எங்களுக்கு என்று விதிக்கப்பட்டிருந்த ஆடை தந்த சங்கடம். வானிலிருந்து விழும் மழைநீர், தெருவில் ஓடும் தண்ணீர், சகதி, பெருங்காற்று இவற்றையெல்லாம் தயக்கமில்லாமல் எதிர்கொண்டு நடக்க முடியாத அளவில் பாவாடையும் புடைவையும் அணிந்த காலம். பிலடெல்ஃபியாவிலும் (Philadelphia) ஆன் ஆர்பரிலும் (Ann Arbor) மழையிலும் பனிப்பாதையிலும் நடக்கையில் தடுக்கி விழுந்து தோளிலும் காலிலும் அடிபட்ட நாட்கள் பல. இதையெல்லாம் தனிக் கதையாகச் சொல்லவேண்டும். 

அது கிடக்கட்டும். இப்ப என்ன சொல்ல வாரேன்? உங்க ஊர்லெ இப்போ மழை இல்லையா? எங்க ஊர்லெ சில நாட்களாகச் சிலுசிலு-என்று மழை, பெருத்த மழையில்லை, ஆனாலும் எங்களுக்கு ரொம்பவும் தேவையான மழை. இன்னும் தேவையான மழை. நாங்க இருக்கிறது பாலைவனக் கலிஃபோர்னியா. 

ஒரு மழைக்காலக் குறுந்தொகைப் பாட்டு (#270) அடிக்கடி நினைவுக்கு வரும். அதை இப்போது எங்க ஊர் மழைக்காலத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

“தாழ்-இருள் துமிய மின்னி-த் தண்ணென 
[எங்கும் கவிந்த இருட்டைப் பிளந்து, குளிர்ச்சியாக … ] 
வீழ்-உறை இனிய சிதறி, ஊழின்
[கீழே விழுகிற துளிகள் எங்கும் சிதறி, முறை முறையாக ]
கடிப்பு-இகு முரசின் முழங்கி, இடித்து இடித்து-ப்
[அறைகோல் தழுவும்/சறுக்கும் முரசைப் போல முழங்கி, இடித்து இடித்து ]
பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே
[பெய்து வாழ்க, பெரிய வானமே! யானும் ]
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
[மேற்கொண்ட செயலை முடித்த பெருமிதம் கொண்ட நேரிய உள்ளத்தோடு]
இவளின் மேவினம் ஆகி-க் குவள-க்
[இவளை அடைந்தேன்; குவளையின்]
குறுந்தாள் நாள்மலர் நாறும்
[குறுகிய தண்டில் அன்று மலர்ந்த மலரைச் சூடிய நறுமணம் பொருந்திய]
நறுமென் கூந்தல் மெல்லணையேம்-ஏ”
[மிக மென்மையான கூந்தல் எனக்கு மென்மையான அணை]

ஏதோ ஒரு கடமைக்காக வெளியூர் போயிருந்த தலைவன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறான். போன இடத்தில் என்னென்ன கடுமைகளோ அதெல்லாவற்றையும் கடந்து வெற்றியுடன் வீடு திரும்பியிருக்கிறான். மேற்கொண்ட கடமையைச் செய்து முடித்த பெருமிதம். அந்த நேரத்தில் மழை பெய்கிறது. மழையை வாழ்த்துகிறான்! 

‘நான் என் கடமையை முடித்து வீடு திரும்பிவிட்டேன்; இனிமேல் கார் வானம் இடித்து இடித்து மழை பெய்யட்டும். மேற்கொண்ட கடமையை முடித்த நேர்மையான உள்ளத்தோடு இவளிடம் சேர்ந்திருக்கிறேன். வானமே, இப்போது மிக நன்றாக இடித்து இடித்து மழையைப் பெய்க! … ‘ 

இன்றைய சொற்களில் சொல்லப்போனால் … ‘என் கடமையை முடித்துவிட்டேன், இப்போது இடிமழை பெய்தாலும் எனக்குக் கவலையில்லை. மழை பொழியும் சுகத்தில் என் துணைவியின் நெருக்கத்தில் எனக்குச் சுகம்.’

என்ன அழகான பாடல்! 

கார்காலத்தில் பகைவரை வெல்லுதல் கடிது என்பதை இலக்கியத்திலிருந்து அறிவோம், இல்லையா? இராமன் + சுக்கிரீவன் படைகள் சீதையைச் சிறை மீட்பதற்காகக் கார்காலம் முடியக் காத்திருந்ததாகப் படித்த நினைவு. 

இந்த 21-ஆம் நூற்றாண்டுக் கார்காலத்தில், அன்பர்களும் நண்பர்களும் ஒரு கட்டிடத்துக்குள் கூடி, பேசி, வேண்டிய உணவு வகைகளைத் தின்பதுக்கு என்றே ஏகப்பட்ட விளம்பரங்கள் இருக்கு! எல்லாமே நெருக்கம் (cozy) என்ற வகையில் அடங்கிவிடும்!  

ஆனாலும் நம்ம சங்கத்தலைவன் சொன்னதில் உள்ள நயம் எல்லாருக்கும் தெளிவாகப் புலப்படுமா? தனக்கும் தன் உறவுக்கும் இடையே உள்ள காதலைப் பொதுவிடத்தில் சொல்ல இந்த வகை நயநாகரிகத்தைக் கற்றுக்கொள்வது நல்லது, இல்லையா?

நிற்க. 

எங்கூர்லெ மழை பெய்வது அரிது. சில நாள் முன்னர் பெய்த மழையை வீட்டுக்குள்ளேயிருந்து ‘பிடிக்க’ முயன்றேன். 

விரும்பினால் பார்க்கவும்: http://www.youtube.com/watch?v=cRCcYdzVwDc&list=HL1393775547

நன்றி,
ராஜம்

Monday, February 10, 2014

குளிர்கால வானம் ...

இயற்கையின் எல்லாக் காலமும் இனியதே. இந்தக் குளிர்காலத் தொடக்கத்தில் என் வீட்டுப் புறத்தில் யான் கண்டு சுவைத்த சில காட்சிகள் இங்கே.














இயற்கைக்கு நன்றி! 

Monday, May 20, 2013

இருக்கும்போதே வாழவை ...

சிலையமைப்பது, மணிமண்டபம் அமைப்பது போன்ற வழக்கங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. நான் வித்தியாசமானவள். இந்த வழக்கங்கள் என்னைக் கவருவதில்லை. 

யாருக்குச் சிலை வைக்கிறார்களோ அவர் உயிரோடு இருந்த காலத்தில், மக்கள் அவரை எந்த அளவு மதித்திருப்பார்கள், அவருக்கு எந்த அளவு உதவியிருப்பார்கள் என்று தெளிவாகத் தெரிவதில்லை. சிலர் அன்றும் இன்றும் இருக்கலாம் -- அதாவது அந்த ஒருத்தர் இருந்த காலத்தில் இருந்தவர்களே இன்றும் இருக்கலாம். 

இதையும் இதுபோன்ற கருத்தையும் உள்ளடக்கி ஒரு பாட்டு எழுதினேன் 1992-இல் ஒரு மாநாட்டு மலருக்காகக் கேட்டார்கள் என்று. அது இங்கே: 

************************ 

இருக்கும்போதே வாழவை
-------------------------------------- 

கண்ணகிபோல் நீயெனக்குக் கல்லெடுக்காதே
காவிரிக்குச் சோழனெனக் கரையும் கட்டாதே
காரிகையின் கீரந்தையாய்ச் சொல்வரையாதே
காயசண்டிகை காதலனாய்க் கண்ணிழக்காதே

திலகவதித் தத்தனைப்போல் தத்தளிக்காதே
தேவந்திபின் தீர்த்தங்களில் தாழவைக்காதே
மாதவியாய் மனங்கலங்கி மாயச்செய்யாதே
மணிமேகலைக் குமரிபோலக் குமையவிடாதே

பொறுமை கண்டாள் சீதையான வைதேகி
சிறுமை கண்டாள் த்ரௌபதியாம் பாஞ்சாலி
வறுமை கண்டாள் விதர்ப்பராணி தமயந்தி
வெறுமை கண்டாள் அகலிகையாம் முனிமனைவி 

தமிழ்மகனே தனிச்சிந்தை உனக்களிக்க
அமிழ்தினிய உலகொன்று பெண்காண
மனங்கொள்ளும் கதையில்லை வளர்நாட்டில்
தனியொருவழி படைப்பாய்நீ வாழ்நாட்டில் 

******************************************** 

மேலே காணும் பாட்டைப் புறந்தள்ளிவிட்டார்கள், 'சோகப்பாட்டு' என்று! ;-) வேறு 'மகிழ்ச்சியான' பாட்டு ஒன்று எழுதித்தரக் கேட்டார்கள். சரியென்று இன்னொரு பாட்டு எழுதினேன். அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு வெளியிட்டார்கள்! அது இதோ:


இங்கே வாழும் தமிழருக்கு
--------------------------------------- 
(இங்கே சீர் பிரித்துத் தந்திருக்கிறேன். படிக்கும்போது நல்லோசை கிட்டும். 1992-இல் நான் இதைப் படித்தபோது கூட்டத்தில் சிலர் மனம் நெகிழ்ந்து கண்கசிந்தனர்!) 

***************
கங்கைக் கரையறியேன் காவிரி கண்டதுண்டு
பொங்கிவரு பொருநைஎன் தாய்மடியும் தந்தைதோளும்
தங்குபுகழ் வையைவழித் தமிழ்தொடர்ந்து
இங்கோடும் Schuykill-மேல் இடம்கண்டேன்
மங்காத Potomac தலைநகரில் சீர்தந்தாள்

தமிழெனக்குத் தாய்ப்பாலின் தனித்தூய்மை
கனிபோலச் சுவைகாட்டிக் களிப்பூட்டும் தேன்இனிமை 
பனிபோலும் படர்மாற்றி உரம்போடும் பெருவலிமை
குனிவில்லாத் தலைதந்து நிறைகாக்கும்  நல்துணைமை

தொகைபாட்டு கீழ்க்கணக்கு காப்பியங்கள்
வகைவகையாய் ப்ரபந்தங்கள் இலக்கணங்கள்
மிகையாகாத் திருமுறைகள் தனிப்பாடல் எனத் 
தகையாகத் தமிழ்சொன்னார் நம்முன்னோர் 

சாத்தன்வழிப் பௌத்தமும் தேவர்வழிச் சமணமும்
மாமுனிவழிக் கிறித்துவமும் உமறுவழி இஸ்லாமும்
தேனிகர்தமிழ் வடிவாகச் சிவமாலின் நெறியோடு
மேலுலக வாழ்வினையும் தமிழ்வழியே கண்டனவே 

ஆரியம் வந்தது வாழும்தமிழின் சீரும்குலைந்தது
ஆட்சித் தொல்லை ஆயிரமாயிரம் கேடுவிளைத்தது
ஈங்கிதன் மீட்சி எங்கே காண்போம் என்றுஉளைந்து
ஏங்கிய நல்லோர் தத்தம் வழியில் சென்றாரே

ஆரியத்தின் ஆதிக்கம் கெடுக்கும் என்று 
சீரியவான் தனித்தமிழைக் காக்க என்று
ஓரியக்கம் உருவாக்கிப் பெயரும் மாற்றி 
நேரியதோர் வழிகண்டார் மறைமலை அடிகள்

நாவலர்பாரதி நாமகள்பாரதி விடுதலை வேண்டிய திரு,வி.க. 
ஏவலரின்றி நாவாய் ஓட்டிய தூத்துக்குடியின் வ.உ.சி.
கேவலமிங்கு அந்நியராட்சி ஒழிக்கவேண்டித் தமிழ்நாட்டுப்
பாவலாராயும் காவலராயும் பாவைத்தமிழைக் காத்தாரே 

நன்மையுடன் வல்லமையும் வேண்டும் என்று
மென்மையாக எடுத்துரைத்தார் எளிய மு.வ.
இன்சொல்லால் எழுத்தாண்டார் சேதுப் பிள்ளை
தன்மனதில் டி.கே.சி கம்பன் கண்டார்

தமிழுக்கெனச் சிறைசென்றார் சில புலவர்
தமிழுக்கென உயிர்தந்தார் பல மறவர்
தமிழைத்தம் புணையாகக் கொண்டார் இன்- 
தமிழைப் பிறநாட்டில் உடன்பயின்றார் 

தொட்டடுத்த இலங்கைமகன் தனிநாயகம்
பாட்டுத்தமிழ் விபுலர் யாழ்ப்பாண நாவலர்
எட்டிநின்ற மலேயாவில் ராசாக்கண்ணர்
தட்டாத் தமிழ்ச் சிங்கப்பூர்த் திண்ணப்பர்

ரஷ்யா தந்த Andronov
செக்கோ கண்ட Kamil Zvelebil
லண்டன் தந்த John Marr
ஜெரூசலத்தில் David Shulman
கலிஃபோர்னியாவில் George Hart
சியாட்டலில் Hal Schiffman
சிக்காகோவில் Norman 

என்றிவரெல்லாம் நம்மொழி பரப்ப
இந்திராவும் கௌசல்யாவும்
இராமனும் நானும் நம்தமிழ் காக்க
எம்உயிர்தந்து பணிபுரிகின்றோம்

எங்கள் பணிக்கூடம் தமிழின் நிலைக்கூடம்
அங்கே தமிழ்பயில்வோர் பின்னே தமிழ்புரப்போர்
இங்கே தமிழ்வாழ நீங்கள் உரமிடுங்கள்
உங்கள் வள்ளண்மை உங்கள் குடிப்பெருமை

கலைத்தந்தை கருமுத்தர் விலையில்லா அழகப்பர்
கலைநாட்டிய அண்ணாமலை இசைதந்த தண்டபாணி
கண்மணிபோல் தமிழ்காத்த இவர்பாதை நீங்கள் கண்டீர்
வண்மைபெறச் செய்வீர் வாழவைப்பீர் தமிழை

************************ 

குறிப்பு: Schuykill பிலடெல்ஃபியாவில் ஓடும் ஆறு. Potomac அமெரிக்கத் தலைநகரில் ஓடும் ஆறு. 


நீங்களே ஆழமாக நினைத்துப் பார்க்கவும். மக்களுக்கு எதில் நாட்டம் என்று!

ஒன்று மட்டும் திட்டவட்டமாக இப்போதே சொல்லிவிடுகிறேன், நல்லாக் கேட்டுக்கோங்க! நான் போன பிறகு, அதாங்க நான் செத்தப்புறம், என்னை யாரும் 'பெரிய தமிழறிஞர், அது இது'-னு எல்லாம் புகழக்கூடாது, எனக்குச் சிலை வைக்கக் கூடாது, சரியா?! நன்றி'ங்க! :-)


Monday, May 13, 2013

"அம்மா நாள்" யாருக்கு?


முன் குறிப்பு
------------------
பின்வரும் பதிவு உண்மையும் கற்பனையும் கலந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தொடையில் ஈரக்கசிவு ரமாவை விடியலுக்கு முன்பே உசுப்பிவிட்டது. திடுக்கிட்டு எழுந்தாள்; புடைவையைச் சுருட்டிக் காலிடுக்கில் வைத்துப் பிடித்துக்கொண்டு குளிப்பறைக்கு ஓடினாள்; இப்பொ வீட்டுக்குள் வரக்கூடாது; பின்புறத் தாழ்வாரத்திலேயே ராக்கி எப்போது வருவாளோ என்று காத்திருந்தாள். 

முன்வாசலில் சாணி தெளித்துப் பெருக்க வேண்டி, விளக்குமாறு எடுக்கத் தாழ்வாரத்துக்கு வந்த ராக்கிக்கு ரமாவைப் பார்த்தவுடன் திகில்; பரிவோடு கேட்டாள்: “இந்த வாட்டியும் உக்காந்திட்டியா, கண்ணு?” 

ரமாவுக்கும் திகில். சொன்னாள்: “என் தலையெழுத்து ராக்கி. உள்ளெ போயி அம்மாகிட்டெ சொல்லு. காப்பி போட நான் வரலெ-னு சடைவா இருப்பாங்க. மொதல்லெ எனக்குத் துணி கொண்டா. குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டா.” 

இன்றோடு அடுத்த ரெண்டு நாளும் ரமாவுக்கு ராக்கிதான் எல்லாமே. ராக்கி கொடுப்பதுதான் சோறு, தண்ணீர் எல்லாம். வீட்டு மனிதர் ஒருத்தரும், அவளை ஏறி மிதிக்கும் கணவனும்தான், அவள் இருக்கிறாளா செத்தாளா? என்று அலட்டிக்கொள்வதில்லை. அது ரமாவுக்குப் பழகிப்போனதுதான். 'படுக்கை கறைப்பட்டிருந்தால் எம்மாம் பெரிய கூச்சல் உண்டாயிருக்கும், நல்ல வேளை அது நடக்கவில்லை' என்ற நிம்மதியே போதும் அவளுக்கு. 

ரமாவுக்கு மாதவிலக்கு என்றால் அவளுடைய மாமியாருக்கு ஏமாற்றமும் எரிச்சலும்; அதெல்லாம் மாமியாரின் செல்லப்பிள்ளை வழியாக அவனுடைய எரிச்சலுடன் கலந்து அவள்மேல் வெடிக்கும்.

ரமாவின் கணவன் வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் ஒரு தடையும் இல்லாமல் உவந்து அனுபவித்தாலும், உறவுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டு தவிப்பதாகச் சொல்லித் திரியும் ஒரு திமிர் பிடித்த தன்னிரக்க வேந்தன்; தற்காதலன். 'அட, சனியனே, ஏன் கலியாணம் கட்டிக்கினே, மூதி?' என்று அவனைக் கேட்பார் இல்லை. 'என்ன சார், போட்ட முதலை எடுக்க வேணாம்?' என்று வாயாடும் நண்பர்களின் சூழலில் தன் விந்து வங்கியின் முதலுக்கு வட்டியில்லை என்பது அவனுக்குப் பெரிய எரிச்சல்!

முதல் இரண்டு மருமகளும் திருமணம் ஆன 10-ஆம் மாதத்தில் "டாண்" "டாண்" என்று பேரக் குழந்தை பெற்றுக் கொடுத்தார்கள். அடுத்தடுத்து, வீடு முழுவதும் பேரப்பிஞ்சுகள். இந்த மூணாவது மருமகள் ஒரு கேடு. வேலை இல்லை, சம்பாத்தியம் இல்லை, செல்லமகனுக்கு வாரிசு கொடுக்கவில்லை. சோத்துக்குத் தண்டம். மாமியாரின் அலுப்பிலும் நியாயம் இருக்கில்லெ!

கண்ணகிக்குப் போல ரமாவுக்கு ... 'யாண்டு பல கழிந்தன.' ராக்கி மட்டும் விடாமல் தன் குடிசையில் தான் வளர்க்கும் பசு, எருமைகளின் பாலை எடுத்துக் கொண்டுபோய் ஊர் எல்லையில் இருக்கும் பாம்புப் புற்றில் ஊற்றி இந்த ரமாவுக்காக வேண்டிக்கொண்டு வருவாள். இது அவளுக்கும் ரமாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

திடீரென்று நாடு முழுக்க, ஊரிலும் வீட்டிலும், அயல்நாட்டுப் பீடை. ஏதோ "அன்னையர் நாள்" என்று சொன்னார்கள். அந்த நாளில் ரமாவின் நிலை தில்லையில் தீக்குளித்த நந்தனின் நிலையை நெருங்கும்.

இந்த ஆண்டும் அதே நாள். ரமாவின் தன்னிரக்க வேந்தன் ஊர் சுற்றல். மாமியாருக்கும் ஓரகத்திகளுக்கும் அவரவரின் கணவர் பிள்ளைகளுக்கும் ஒரே அலட்டல். கண்ட கண்ட நிறங்களில் ஏதோ கேக்காம், பேக்காம், சேம்ப்பேனாம்.

ராக்கியின் கொள்ளுப்பேரன் புழைக்கடையில் வந்து ரமாவைக் கூப்பிட்டு ராக்கி கீழே விழுந்ததைச் சொல்லிப் பதறினான். ரமா அவன் பின்னால் ஓடி நடந்தாள்.

நாலு தெருவுக்கு அப்புறம் ஊர் எல்லை. 3-ஆம் தெருவில் பின்னாலிருந்து ஒரு குரல்: "அம்மா, அம்மா"

ரமா திரும்பிப்பார்த்தாள். ஒரு பெண் இவளைப் பார்த்து ஓடி வந்தாள். மூச்சிறைக்க ரமா நின்றாள். ஓடி வந்த பெண்ணின் குரல் பழகிய குரல்போல இருந்தது. ஆனால் அவள் யாரென்று தெரியவில்லை. குழப்பம்.

"அம்மா, என் பெயர் காவேரி. நீங்க கோட்டையூர்-லெ எனக்கு  ஆறாப்பு டீச்சர். என்னெ 'நீ கவியா காவியா'-னு கேலி செய்வீங்க, நெனெவு இருக்காம்மா?"

இருவருக்கும் ஒரே பூரிப்பு.

"ஆமாங்கண்ணு, நீ இங்கெ எப்பிடி வந்தே? என்னெ எப்பிடிக் கண்டுபிடிச்செ?"

"அம்மா, ஒங்க புடைவையும் நடையின் அலாதியும் இவுங்க அவுங்கதான்-னு சொல்லிச்சு'ம்மா. ரொம்ப நாளா ஒங்களெ இந்தப் பக்கம் பாத்திட்டிருக்கேன்'மா. பக்கத்துலெ வந்து கேக்கப் பயம். இன்னிக்கி எதோ துணிச்சலாக் கேட்டுட்டேன்'மா. கலியாணம் கட்டி இந்தூருக்கு வந்தேன்'மா. மருமகளுக்குப் பிள்ளை இல்லெ-னு நம்மூர்ப் பாம்புப் புத்துலெ பால் ஊத்தறேன்'மா"

"வா, வா, நானும் அங்கெதான் போறேன்."

இரண்டுபேரும் ராக்கியின் கொள்ளுப்பேரனும் பாம்புப் புத்து நோக்கி ஓடினார்கள்.

"அம்மா, தாயே" என்று ஒரு விளி. எப்போதும் வரும் ராப்பிச்சைக்காரன் இப்போது இங்கே பசியால் மயங்கித் தள்ளாடுகிறான். "காவேரி, அந்தப் பாலை அவனுக்குக் கொடு" என்று சொல்லிக்கொண்டே ரமா பாம்புப்புத்துக்கு  ஓடினாள். காவேரியும் ராப்பிச்சைக்காரனுக்குப் பாலைக் கொடுத்துவிட்டு ரமாவின் பின்னே ஓடினாள்.

ராக்கியின் கையிலிருந்து உருண்ட பால் குவளை பாம்புப் புத்தின் அடியில் தடுக்கிக் கிடக்கிறது. புத்தைச் சுற்றிலும் எருமைப்பால்.

"அம்மாடீ, நாகம்மாவுக்குப் பால் ஊத்த மறந்திடாதேம்மா" என்று சொல்லிக்கொண்டே ரமாவின் மடியில் தலையைச் சாய்த்தாள் ராக்கி.

ராக்கியின் குவளையை எடுத்துகொண்ட காவேரி ரமாவைப் பார்த்தாள். "சரி" என்று சொல்வதுபோல ரமாவும் தலையை அசைத்தாள்.