Sunday, April 14, 2013

சுடோ சுடு ... வடை சுடு ...

வடை! தமிழ்நாட்டு உணவில் ஒரு முக்கியப் பங்கு இந்த வடை க்கு. பல வகை வடைகள் உண்டு. 


இங்கே மெதுவடை, உழுந்து வடை, உளுத்தம்பருப்பு வடை என்றெல்லாம் குறிக்கப்படும் ஒரு வகை வடை செய்யும் முறையைப் பார்ப்போமா.  


1. ஒரு சின்ன கிண்ணத்தில் உளுத்தம்பருப்பை (உடைத்த பருப்பு என்றாலும் சரியே) எடுத்து, நன்றாகக் கழுவி நல்ல தண்ணீரில் 1~2 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறவைக்கும் பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் இருந்தால் போதும். ஒரு மணிக்கூறு இடையில் தண்ணீர் வற்றிப்போவதுபோல் தெரிந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.



2. ஊறிய உளுத்தம்பருப்பை மேற்கொண்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.  கல்லுரல் வசதி இருப்பவர்கள் பாக்கியவான்கள், ஆசீர்வதிக்கப்படுவார்கள்! 

மாவு "கிள்ளு பதத்தில்" இருக்க வேண்டும். ரொம்ப ரொம்ப மெது வடை வேண்டுமென்றால் மாவு சிறிதே தளர்ந்து இருக்க வேண்டும்; ஆனால் வடை வட்டமாகத் தட்ட வாராது; பொரியும்போது எண்ணெயும் குடிக்கும். 

அரைத்த மாவு கொஞ்சம் ஈரப்பசையுடன் இதோ இப்படி இருந்தாலே போதும். மேலே இருக்கும் சிண்டு போன்றது பிள்ளையாருக்கு!  









3. மேலே காட்டிய மாவில் உங்கள் சுவைக்கு ஏற்றபடி உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.  உப்பு சேர்த்தவுடன் வடை மாவு கொஞ்சம் நீர்த்துப் போகும். அப்படிப் போனால் சிறிது நேரம் மாவைக் குளிர் பதனப் பெட்டியில் வைக்கலாம். அல்லது காகிதத் தட்டில் வைத்து ஈரத்தை உறிஞ்சச் செய்யலாம். 

கீழே உள்ள படத்தில் மேல் பக்கம்  உள்ள உருண்டை கிள்ளு பதத்தில் எடுக்கப்பட்டது. 





4.  ஒரு சிறு உருண்டை மாவைக் கிள்ளி எடுத்து, வட்டமாகத் தட்டவும். சாதாரணமாக இதை வாழை இலையில் அல்லது கையிலேயே தட்டுவது பழமை. புதுமை உலகில் plastic sheet அது இது என்று வந்துவிட்ட காலத்தில் என்ன செய்ய? 


4a. உள்ளங்கையில் வைத்துத் தட்டி ஒரு வட்டமான உருவை உண்டாக்கவும். அந்த வட்டத்தின் நடுவில் ஒரு துளை உண்டாக்கவும். 








4b. சோளக் கதிரின் மேல் தோல் (corn husk) இருக்கில்லெ, அதை எடுத்து அதில் வடை மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் துளை உண்டாக்கவும். இதுதான் மிகச் சிறந்த முறை. ஒட்டாமல் ஒடியாமல் வட்டமான மாவை எடுத்து எண்ணெயில் போடலாம்! 






5. வட்டமாகத் தட்டிய வடைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எந்த எண்ணெய் என்பது உங்கள் விருப்பம். தேங்காயெண்ணெயும் நல்லெண்ணெயும் நல்ல மொறு மொறு என்ற வடைகள் தரும்.  பிற எண்ணெய்கள் சூட்டுக்குத் தக்கபடி வடையின் நிறத்தையும் கடி பதத்தையும் மாற்றும். வேண்டும் பதத்துக்கு வடைகளைப் பொரித்து எடுக்கவும். 






வெளியில் மொற மொற உள்ளே மெது மெது வடைகள் தயார்! 




No comments:

Post a Comment