Friday, June 17, 2016

ஒரு மூதாட்டியின் மசக்கை ...

ஒரு மூதாட்டியின் மசக்கை ...
--------------------------------------

யார் அந்த மூதாட்டி? வேற யாரு, நானே நானே!

என்ன இந்த வயசுலே மசக்கையா! அமெரிக்காவுலே என்னனாலும் எப்பனாலும் நடக்கும்-போல! 


ஆண்டவா, ஈதென்ன மதுரைக்கு வந்த சோதனை?!

கவலைப்படவேண்டாம் ... கொஞ்சம் 'கவித்'துவமா எழுதப்பாத்தேன், அம்புட்டுதேன்!

++++++++++

நெடுங்காலமாகவே ஒரு வாழைக்கன்று வேண்டுமென்று வேண்டியிருந்தேன். வெளிப்படையாகக் கேட்டபோதும் கிடைக்கவில்லை! ;-)

சரி, வாழையிலையாவது கிடைத்தால் நல்லா'ருக்கும் என்று நினைத்தேன். அண்மையில், தோழி சற்குணா பாக்கியராஜ் அவர்களின் கைப்பக்குவத்தால் விளைந்த வாழைமரத்து இலைகள் கிடைத்தன.


++++++++++



சிறுபிள்ளைப்பருவ நினைவுகள் என்னை ஒருபோதும் மறந்ததில்லை. என் சிறுபிள்ளைப்பருவத்தில், எங்கள் குடும்பம் இருந்த மதுரையிலிருந்து சொந்த ஊரான வீரவநல்லூருக்கு அடிக்கடிப் புகைவண்டிப்பயணம். அந்தக் காலப் புகைவண்டி பற்றி இன்று பலருக்கும் தெரியாது. 



அந்தக்காலக் கூட்டுக்குடும்பவாழ்க்கையில், அம்மா-அப்பாக்களுக்குத் தனிமை கிடைப்பது ரொம்பவும் அரிது. [எப்படித்தான் இந்திய மக்கள்தொகை இப்படிக் கூடிப்போச்சோ!] ஆனால், எங்க தாத்தாவுக்கு அறிவுக்கூர்மை மிகுதி. நைநை நச்சுநச்சு என்று தொணதொணத்துத் துளைத்தெடுக்கும் என் அண்ணனையும் என்னையும் விடியற்காலையில் 5-மணிக்கெல்லாம் கோயிலுக்குக் கிளப்பிக்கொண்டுபோய்விடுவார்; மாலையில், சர்க்கஸ் அங்கே இங்கே என்று வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிடுவார்! அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அங்கங்கே கொஞ்சம் நிம்மதிப்பெருமூச்சு கிடைத்திருக்கும், ஆனால் romance-க்கு இடம் இருந்ததோ என்னவோ தெரியாது; அப்போ எனக்கு 10-வயதுக்குட்பட்ட பல ஆண்டுகள்.



தாத்தாவின் இன்னொரு "குயுக்தி." மதுரையிலிருந்து வீரவநல்லூருக்கு நாங்கள் போகும்போதெல்லாம் ... அண்ணனுக்கும் எனக்கும் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் இரண்டு தாள்களில் மதுரை-வீரவநல்லூர் ரயில்வண்டிப் பாதையில் இடைப்படும் ஒவ்வொரு நிலையத்தின் பெயரையும் எழுதிக்கொடுப்பார் (மதுரை->பசுமலை->திருப்பரங்குன்றம் ...). எங்களுடைய "ரயில்பாடம்" என்ன என்றால், ரயில்வண்டியின் சன்னல்வழியே பார்த்துக்கொண்டிருந்து, தாத்தா குறித்த ஒவ்வொரு நிலையமும் வரும்போது அதை அவர் கொடுத்த தாளில் குறிக்கவேண்டும். ஊருக்குப் போகும்போதும் சரி, திரும்பி வரும்போதும் சரி. மதுரைக்குத் திரும்பி வந்த பிறகு சரியான விடைகளைப் பொருத்து காலணா, அரையணா என்று பரிசு கிடைக்கும். யேயப்பா ... 'நாலாட்டின்புத்தூர்' என்ற அந்த ஊரின் பெயர்ப்பலகையைப் படித்துப் புரிந்துகொள்ள எவ்வளவு ஆண்டுகள் ஆயின! அதெல்லாம் இன்பமான நிகழ்ச்சிகள்!



ரயில்வண்டிப்பயணத்தின்போது அம்மா-அப்பாவுக்கும் கொஞ்சம் நிம்மதி, எங்களுக்கும் பொழுதுபோக்கு! தாத்தாவுக்கு எவ்வளவு அறிவு! என் தாத்தா அருமைத்தாத்தா! 



++++++++++



மேற்சொன்ன ரயில்பயணத்தின்போது, சாத்தூரில் வெள்ளரிப்பிஞ்சு, மணியாச்சியில் முறுக்கு ... இப்படிச் சொந்த ஊர்க்காரங்களுக்கு வாங்கிக்கொண்டு போவது வழக்கம். சில சமயம் அம்மா சோத்துமூட்டை கட்டிக்கொண்டுவருவார்கள். சிலசமயம் ரயில்நிலைய உணவகங்களில் கிடைக்கும் பொதிசோறே உணவாகும். தாத்தா ரயில்துறையில் வேலைபார்த்ததால் அந்த நுணுக்கமெல்லாம் அவருக்குத் தெரியும்! மதுரையிலிருந்து கிளம்பும்போதே, பயணச்சீட்டு  வாங்கும்போதே, மணியாச்சிக்குத் தெரிவித்துவிடுவார் -- இத்தனைக்கட்டுப் பொதிசோறு வேணுமென்று. மணியாச்சி நிலையம் வந்தவுடன் ... நாங்கள் இருக்கும் பெட்டிக்குப் பொதிசோறு வந்துவிடும். 



இது எங்களுக்கு மட்டுமில்லை, எல்லாப்பயணிகளுக்கும் உண்டான வசதிதான். அந்த நிறுவனத்தின் பெயர் மறந்துபோச்சு -- SRR Room (Southern Railway Restaurant Room?) என்று நினைக்கிறேன், திட்டமாகத் தெரியவில்லை, மறந்துபோச்சு. பயணிகள் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் அந்தந்த ஊர்களில் அவர்கள் குறிப்பிட்டு வேண்டிய உணவுப்பொட்டலங்கள் ரயில்பெட்டிக்கு வந்துசேரும்! என்ன அருமையான ஏற்பாடு!



அந்தப் பொதிசோற்றின் மணமும் சுவையும் அலாதி! சுடச்சுடப் பலவகை உணவுகள் கிடைத்தாலும் ... அந்தத் தயிர்ச்சோறு + எலுமிச்சை ஊறுகாய்ப்பொதியின் மணமும் சுவையும், 'இந்திரர் அமிழ்தம் இயையினும் வேண்டேன்' என்ற மனவுறுதியைக் கொடுத்துவிடும்! 



மேலே கட்டிய சணல்கயிற்றை அவிழ்க்கும் முயற்சி, பதிப்பகத்தின் அச்சு மை கசிந்த அந்தப் பிசுபிசுச்செய்தித்தாளின் மணம், பிரித்தவுடன் விரியும் வாழையிலையின் மணம், உள்ளே பொதிந்திருக்கும் தயிர்ச்சோற்றின் மணம், எலுமிச்சை ஊறுகாயின் மணம் ... இன்று நடிக்கப்படமுடியாதவை!



++++++++++



அண்மையில் சற்குணா பாக்கியராஜ் அவர்கள் கொடுத்த வாழையிலையில் என் சிறுபிள்ளைக் கனவை மீண்டும் காணமுயன்றேன்.



1. வாழையிலையில் பரப்பிய தயிர்ச்சோறு + திடீரென உருவாக்கிய எலுமிச்சை ஊறுகாய்:





2. வாழையிலைப்பொதி:





3. பொட்டலம்:





மகனிடம் கொடுத்தேன். தயிர்ச்சோறு என்று புரிந்துகொண்டான். 'கோயில் பிரசாதமா?" என்று கேட்டான். ரயில்பயணம் அறியாத அந்த high-tech பிள்ளைக்கு என் சிறுபிள்ளைப்பருவம் பற்றிச் சொல்லவேண்டிவந்தது!

++++++++++



இப்போது சற்குணா கொடுத்திருக்கும் வாழைக்கன்று ஒரு புத்திலை தந்திருக்கிறது.





தமிழ்மரபு வாழிய வாழியவே!

2 comments:

  1. SRR என்று கேள்விப்பட்டதில்லை. VLR உண்டு. Vegetarian Light Refreshment.

    ReplyDelete
  2. ஆமாம், ஹரி, SRR என்று குறிப்பதைப் பற்றி ஒரு நெருடல் இருந்தது. பிறகு கல்பட்டு நடராஜன் அவர்கள் மூலம் அது IRR (Indian Refreshment Room) என்று நினைவுறுத்தப்பட்டேன். வீட்டில் IRR தயிர்சாதம், IRR சாம்பார் சாதம் ... என்று பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது! அருமையான காலம் அது!

    ReplyDelete