Saturday, December 1, 2012

வானமடி வானம் ... கலியில், புதுமை நிறை வானம்



வானத்தைப் பாருங்கள். ஒரு நொடியில் காணும் காட்சி அடுத்த நொடியில் காணாது. பார்க்கும் மனிதக் கண்களுக்குச் சுவையும் சுமையும் தரும் வானம். இந்த வானத்தின் பல வகைப்பட்ட நிலைகளைக் கண்டு வியக்காத உள்ளம் இருக்குமோ?    

  
என் வீட்டுக்கு மேலும் முன்னும் பின்னும் நான் நடக்கும் பாதையிலும் எனக்கு என்றே தனியாகத் தன்னைக் காட்டும் வானம் மிக அழகு. ஒரு சில நொடிகளை மட்டும் சிறைப்பிடிக்க முடிந்தது.  


1. இது என்ன 'கண்டம்?' அமெரிக்காவா? ஆப்பிரிக்காவா? :-) 




2.  அதோ, அந்த நீல இடுக்கில் நான் ஒளிந்து விளையாட வேண்டும்!




3. என்ன ஒரு சிலிர்ப்பு!















4.   என்ன நினைக்கிறாய், வானமே?




 

5.   செயற்கையின் ஊடுருவல் ...



என் பார்வை தொடரும் ... 


Thursday, September 27, 2012


கூட்டு -- தக்காளிக்காய்க் கூட்டு
----------------------------------------------------

பழுக்காத, நல்ல காயாக உள்ள தக்காளிதான் இதற்கு ஏற்றது. இங்கே தெற்கு மாநிலங்களில் தக்காளிக்காய்ச் சமையல் புகழ் வாய்ந்தது. பெரும்பாலும் பஜ்ஜிபோலச் சமைப்பார்கள். வட கலியில் தக்காளிக்காய் கிடைப்பது அரிது. அதனால் ... கிடைத்த பழுக்காத "வாரிசுத் தக்காளி"யைப் ("heirloom tomatoes") பயன்படுத்தினேன்! "வாரிசுத் தக்காளி" என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்: http://en.wikipedia.org/wiki/Heirloom_tomato 

மிகவும் சுவையான கூட்டு கிடைத்தது!

செய்முறை
----------------

1. தக்காளிக் காய்களைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.



2. காய்களைப் பெரிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.



3. இரண்டு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல் (பச்சை/உலர்ந்தது எதுவானாலும் சரி), 2~3 மிளகாய் வத்தல் (சுவைக்கு ஏற்றபடி), 1/4 தேக்கரண்டி சீரகம் ... இவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். முதலில் தேங்காய்த் துருவலை வறுத்தால், வத்தலையும் சீரகத்தையும் வறுக்க எண்ணெய் விடத் தேவையில்லை. தேங்காயின் எண்ணெய்ப் பசை போதும்.  


4. வறுத்த பொருள்களைக் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளலாம்; அல்லது, தண்ணீர் விடாமலே சின்ன திரிவையில் (காப்பிக்கொட்டை திரிக்கும் அரைவையில்) திரித்துக் கொள்ளலாம்.


இப்போது "மசாலா" தயார்!

5. நறுக்கிய காய்த் துண்டங்களைச் சிறிது உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து, சிறிது தண்ணீரில் ரொம்பவும் குழையவிடாமல் வேகவைக்கவும்.


6. காய்கள் பாதி (al dente, கடி பதத்தில்) வெந்தவுடன் அரைத்து/திரித்து வைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து மிகவும் சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

7. கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை தாளித்துக் கலக்கவும். சுவையான தக்காளிக்காய்க் கூட்டு தயார்!




8. அலங்காரமாகச் செர்ரித் தக்காளிப் பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.



பி.கு: காயை ரொம்ப நேரம் வேகவைத்தால் குழைந்துபோகும். அப்படியானால், சூப் போலச் செய்தும் சாப்பிடலாம். சாதாரணத் தக்காளிக் காயில் இருக்கும் கடுப்புச்சுவை இந்த "வாரிசு"த் தக்காளியில் இல்லை. சிறிது இனிப்பும் புளிப்புமாக மிக நன்றாக இருந்தது. :-)

Saturday, September 15, 2012

பாதையோரப் பரிசு ... (4) 


அன்று ஒரு நாள் காலையில் வெளியே நடந்து சென்றபோது ... மெக்னோலியா (magnolia) மரங்களிடம் கேட்டுக்கொண்டே நடந்தேன்: 'ஊர்லெ ஒரு தம்பி இருக்கு; அதுக்கு ஒன் பூவெப் பாக்கணுமாம். என் கண்ணுலெ ஒரு பூவைக் காட்டேன்' என்று. ஆ! என் வேண்டுதலுக்குச் செவியையும் பூவையும் சாய்த்தது ஒரு மரம்! கண்ட காட்சி ... இங்கே முதல் படத்தில்.


1. ஒரு மெக்னோலியாப் பூ (magnolia) முனைவர் காளைராசனுக்காகவே என் கைக்கு எட்டும் தொலைவில் பூத்திருந்தது!!!




2.   நாங்க இந்த ஊர் அரளிப்பூவாக்கும் ...




3. ஒங்க ஊர்லெ எங்களுக்கு நல்ல பேர் இல்லெ (பீரோஜா/பீநாறி-னுவீங்க). ஆனா, இங்கே நாங்க நல்லாவே இருக்கோம்!




4. பாரு பாரு, என் தங்க நெறத்தெப் பாரு!



5.   நாங்க புதுசா ... புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ...




அட ... இவ்ளோ சீக்கிரமா ... குடும்பம் பெருகிப்போச்சா?!!!



6. பூச்சாண்டி மாதிரி ஒரு முகம் தென்படுகிறதா? 



ஆனா, நாங்க எல்லாரும் பூச்சாண்டியில்லெ!




7. என் வீட்டு வாசற்படிக்கு அருகில், சின்ன செடியில். நல்ல மணம்! ஆனால் ... வண்டிகளின் புகை புழுதிகளுக்கு இடையில் அந்த மணத்தை நுகரத் தனி நயம் வேண்டும்!




8. கால மாற்றத்தைத் தெரிவிக்கும் வானிலை அறிக்கையாளர்கள்!




Thursday, August 30, 2012

பாதையோரப் பரிசு ... (3)  


பாதையோரப் பரிசு (3)
----------------------------
இன்று காலை நடந்து போனபோது பார்த்து மகிழ்ந்த மலர்கள் ...

1. இது முனைவர் காளைராசன் ஸ்பெசல். மெக்னோலியா மலரும் மொட்டும்.



2. மிக மென்மையானவை. பாதையோரச் சிக்கலிலும் தளராது வளர்பவை. பெயர் தெரியாது.


2.a. கொத்துப்பட்ட மலர் ஒன்று ... , பாவம்!



3. இங்கே நான்கு தலைமுறையைப் பார்க்கிறீர்களா? 



4. எங்க நிறம் பிடிச்சிருக்கா?


5. நாட்டியப் பள்ளியில் இப்பதான் சேர்ந்திருக்கோம் ... .



ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வண்டிகளும், மக்களும் போய்வரும் பாதையோரத்தில், புழுதிக்கும் (ஆம், மெல்லிய புழுதி), வண்டிகள் வெளிவிடும் புகைக்கும் ஈடு கொடுத்து வளரும் செல்வங்கள் இவை! வணக்கம் சொல்லத்தான் தோன்றுகிறது.


Thursday, August 23, 2012

பாதையோரப் பரிசு ... (2)

பாதையோரப் பரிசு ... (2)
--------------------------------

இன்று காலையில் நடந்துபோனபோது நான் கண்ட அருமை.



மஞ்சள் + ஊதாக் கலவை.



புல்லிற்கும் உண்டு புகழ்!






No wonder, California is "Golden State!"





அழகிய ஊதா நிறப் பூக்கள், மரங்களில். இந்த மரத்தில் பூக்கள் பூக்க  நல்ல வெட்ட வெளியும் வெயிலும் தேவை. பல நிறங்களில் (வெள்ளை, இளஞ்சிவப்பு, நல்ல சிவப்பு, ... இப்படி) பூக்கும். 


எங்கே எப்படிப் பூத்தாலும் அந்தப் பூவின் அழகைப் பாராட்டுவோம். இயற்கைக்கு நன்றி செலுத்துவோம்.







Thursday, August 16, 2012

பாதையோரப் பரிசு ...
----------------------------------
என் வீட்டருகில் நடந்து போகும்போது பல அமைதியான இடங்கள் குறுக்கிடும். அங்கே அழகான பூக்களும் குறுக்கிடும். உண்மையில் அவற்றைத் தள்ளிவிட்டுத்தான் என் நடையுதவியைக் கொண்டுபோக முடியும்.  

அப்படி நடந்துபோன சில நாட்களில் நான் சுவைத்த காட்சிகள் இங்கே.

1. இது மெக்னோலியா (magnolia) மரத்திலிருந்து கீழே விழுந்த இலை. நிறத்தையும் பளபளப்பையும் பாருங்கள். இறந்தபின்னும் புகழ்! :-)





2. மெக்னோலியா மொட்டு.



3. இந்தப் பூவின் பெயர் லில்லி ஆஃப் த நைல் (lilly of the Nile). மிக அழகு ஊதா நிறம். நத்தைகளுக்குப் பிடித்த செடி!




4. இந்தப் பூவின் பெயர் தெரியவில்லை. ஆனால் பல நிறக் கலவை என்னைக் கவர்ந்தது.


5. இந்தப் பூவின் பெயரும் தெரியவில்லை. காலையில் எடுத்த படம் இரவில் எடுத்ததுபோன்ற தோற்றம்.



6. ஐரிஸ் போல, ஆனால் திட்டமாகத் தெரியவில்லை. ஆர்க்கிட் போல, ஆனால் ஆர்க்கிட் இல்லை.




7. மதுரை உதயசங்கருக்குப் போட்டியாக ... (ஃபோட்டோஷாப் வேலை இல்லவேயில்லையாக்கும்!)


நம்மைச் சுற்றி இயற்கை அழகு நிறைந்திருக்கிறது. கண்டும் கேட்டும் சுவைக்காவிட்டால் நமக்குத்தான் இழப்பு.  இயற்கையைச் சுவைப்போம். நன்றி சொல்வோம்.

Sunday, March 18, 2012

சப்பாத்திக் கள்ளி ... சமைக்கலாமா?


நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். இந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.  


சோத்துக்கத்தாழை/சோற்றுக்கற்றாழை (aloe vera) என்ற பயிரின் சாற்றை எடுத்துத் தலைமயிருக்குத் தடவுவதில் பயனுண்டு என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். புண்களை ஆற்றும் பயன் அதற்கு உண்டு என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும். சோற்றுக்கற்றாழைச் சாறும் மாத்திரைகளும் இங்கே கிடைக்கும்.  


சப்பாத்திக்கள்ளி என்பது வேறு. இதை இங்கே "நோபால்/நோபேல்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகத் தெரிகிறது. மேல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopal


வீட்டில் வளர்த்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் இது.  


கலிபோர்னியாவில்தான் இந்தச் சப்பாத்திக் கள்ளியைக் கடைகளில் பார்த்து வாங்கிச் சமைக்கத்தொடங்கினேன்.


மெஹிக்கோ/மெக்சிகன் மக்கள் இதைப் பல வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஊறுகாய் போடுவதுபோல் இதை இவர்கள் சாலட் என்ற உணவு வகையாகவும், சுடுதல்/வாட்டுதல் (barbeque) என்ற வகையிலும், இன்னும் பிற வகையிலும் பயன்படுத்துகிறார்கள்.


புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி, தக்காளி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் இதன் அடிப்படைச் சுவை கிடைக்கும். ஆனால் சிலருக்கு இதன் வழுவழுப்பு பிடிக்காமல் போகலாம். 

இந்தச் சப்பாத்திக் கள்ளியில் ெவண்டைக்காய்போல வழுவழுப்பு இருப்பதால் வெண்டைக்காயைப் பயன்படுத்துவதைப் போலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பச்சடி செய்யலாம், பஜ்ஜி போடலாம் (!) ... இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.


ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே.


++++++++++++++++++++++++++++++++++++++++++


1. சப்பாத்திக் கள்ளித் தாளை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளவும். மேலே இருக்கும் முள்ளைக் களைந்துதான் கடைகளில் விற்பார்கள். அதற்கும் மீறி முள் இருந்தாலும் இருக்கும். கைவிரல்களில் முள் குத்தாமல் பார்த்துக்கொள்ளவும்.



2. வேண்டிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.




3. வெண்டைக்காய் வதக்குவது போலவே வதக்கி எடுத்துக் கொள்ளவும் -- கடுகு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி ... இன்ன பிற போட்டு.




குறிப்பு:  மேலே சொன்ன தயாரிப்பைத் தயிர் கலந்து பச்சடி செய்து சாப்பிடலாம். தக்காளியுடன் கலந்து சாப்பிடலாம்.