Tuesday, February 15, 2011

வற்றல் குழம்பு... - 1

"வற்றல் குழம்பு" என்று எழுதுவதை "வத்தக் குழம்பு" என்றும் "வத்தக் கொழம்பு" என்றும் சொல்லலாம். அவரவர் விருப்பம்.

இது என்ன பெயர்? குழம்பை வற்றவைப்பதால் "வற்றல் குழம்பு" என்ற பெயரா? ஏதாவது ஒரு வத்தல் ("வற்றல்") போட்டுச் செய்வதால் "வற்றல் குழம்பு" என்ற பெயரா? -- இந்தக் கவலையெல்லாம் ... நேரம் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் பட்டுக்கொள்ளட்டும்!

வற்றல் குழம்பைப் பல வகையில் செய்யலாம். ஓரளவு எளிமையான முறையில் வற்றல் குழம்பு செய்யப் பார்க்கலாமா? அப்படி வற்றல் குழம்பு செய்யும் முறை ஒன்று இங்கே -- சுண்டைக்காய் வத்தல் போட்டுச் செய்தது.

 
தேவையானவை
---------------------
வத்தல் - 1 ~ 2 மேசைக்கரண்டி அளவு
நல்ல புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1/2 ~ 3/4 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி (அவரவர் சுவைக்குத் தக்கபடி)
சீரகம்  - 1/4 தேக்கரண்டி
விரளி மஞ்சள் - சிறிய ஒன்று
வத்தல் மிளகாய் - 2 (தேவையானால்)
உப்பு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
பச்சைக் கறிவேப்பிலைத் தழைக் குச்சி - 2
கடுகு - தாளிக்க
நல்லெண்ணெய் - 1~2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 3 கோப்பை புளிக்கரைசல் எடுத்துக்கொள்ளத் தேவையான அளவு


செய்முறை (சுண்டைக்காய் வத்தல் போட்டது)
------------------------------------------------------------

1. சுண்டைக்காய் வத்தலை மண், தூசி போகக் கழுவி வடிகட்டி உலர்ந்த தாளிலோ அல்லது துணியிலோ பரத்தி உலர வைக்கவும். நான் பயன்படுத்தியது கடையில் வாங்கின வத்தல்.



2. கழுவியபின் உலர்ந்த வத்தலைச் சிறிதளவு எண்ணெயில் வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.




3. புளியைக் கழுவி நல்ல தண்ணீரில் கரைத்து 3 கோப்பை அளவுக்குக் கரைசலாக எடுத்துத் தனியே வைக்கவும்.  மண் ஏதாவது இருந்தாலும் சிறிது நேரத்தில் அது பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும்.

4. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு -- இவைகளைத் தனித் தனியாக, எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.



விரளி மஞ்சளை வறுக்கவேண்டாம்.



4. வறுத்த பருப்பு, வறுத்த மிளகு சீரகம், பச்சை (வறுக்காத) விரளி மஞ்சள் -- இவைகளைச் சேர்த்து மையாகத் திரித்துக்கொள்ளவும்.



5. ஒரு நல்ல பாத்திரத்தில் புளிக் கரைசலை ஊற்றி, மேற்சொன்ன பருப்பு-மிளகு-சீரகப் பொடியைக் கலக்கவும். சிறிது உப்பும் சேர்க்கவும்.

6. தேவையானால் ... 1~2 மிளகாய் வத்தலைக் கிள்ளி, புளிக்கரைசலில் சேர்க்கவும்.

7. புளிக் கரைசலை மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.

8. புளிக் கரைசல் கொதிக்கத் தொடங்கி 5 மணித்துளிகளுக்குப் பின் வத்தலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.



9. சிறிது நேரத்தில் (அடுப்பின் சூட்டுக்குத் தக்கபடி) புளிக் கரைசல் கொதித்துப் பொங்கி நுரைத்து அளவில் குறைந்து ("வற்றி") வரும். பார்க்கவே அழகாக இருக்கும்! அவரவர் விருப்பத்திற்குத் தக்கபடி ... முதலில் கொதிக்கவைத்த புளிக் கரைசல் பாதிஅளவு குறைந்து வற்றி வரும்போது அடுப்பிலிருந்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.

10. கடுகு, பெருங்காயம், பச்சைக் கறிவேப்பிலை தாளிக்கவும்.



குறிப்பு:
---------

+ விரளி மஞ்சள் இல்லாவிட்டால் அதற்குப் பதிலாகச் சிறிது (1/4 தேக்கரண்டி அளவு) மஞ்சள் பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

+ மிளகின் காரமே போதும் என்று இருந்தால் மிளகாய் வத்தல் சேர்க்கத் தேவையில்லை.

+  இந்தக் குழம்பைக் கைபடாமல் நல்ல முறையில் வைத்திருந்தால் பலநாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும்.

+ (சோய்) தயிர்ப் பச்சடி, (சோய்) தயிர்ச் சோறு இவைகளோடு சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.

+ வத்தல்களில் பலவகை உண்டு.  Cranberry-யை வீட்டின் சிறு கொல்லைப்புறத்தில் காயவைத்து வத்தல் செய்தது:




+ இந்தப் பழம் தரும் புளிப்புச் சுவை வத்தல் குழம்புக்கு ஏற்றது. சிவப்பு நிறம் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனாலும் சுவை இருக்கும்.

3 comments:

  1. நல்ல எளிமையான செய் முறை அம்மா. நான் செய்து பார்த்துவிட்டு வருகிறேன். நன்றி அம்மா.இவ்வளவு மெனக்கெட்டு அழகாக பொறுமையாக சொல்லிக் கொடுத்ததற்கு......

    ReplyDelete
  2. வித்தியாசமான செய்முறையில் வத்தக் குழம்பு. செய்து பார்க்கிறேன். நன்றி அம்மா.

    ReplyDelete