Monday, April 22, 2013

"காம்பு சொலித்தன்ன ... "

"காம்பு சொலித்தன்ன" என்றால் என்ன? 


'மூங்கிலைப் பிளந்தால் போல' என்பதுவே "காம்பு சொலித்தன்ன" என்பதன் பொருள்.

மூங்கிலை ஏன் பிளக்கவேண்டும்? மூங்கிலைப் பிளப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பந்தல் போடலாம், தட்டி போடலாம், ... இப்படி.


மூங்கிலைப் பிளந்தால், அதன் உட்புறத்தே இரண்டு கடினமான வெளிப்பகுதியையும் ஒட்டி மிக மெல்லிய படர்வு (filament) இருப்பதைப் பார்க்கலாம். அந்த மிக மென்மையான படர்வு இருக்கே அதுதான் காம்பின் சொலி. "காம்பு சொலித்தன்ன அறுவை" என்றால் அந்தப் படர்வை எடுத்தால்/உரித்தால்  போன்ற துணி (== ஆடை).


காம்பு == மூங்கில்; சொலி == உரி.

இந்தச் சொலி என்ற சொல்லை ஆங்கிலத்தில் "peel" என்று புரிந்துகொள்ளலாம். பெயராகவும் வினையாகவும் பயன்படும். 

பாம்புடன் தொடர்புபடுத்தும்போதும், மூங்கில் போன்றவற்றோடு தொடர்புபடுத்தும்போதும் இந்தச் சொல் "உரி" "சொலி" என்ற குறிப்பைப் பெறுகின்றன.


பண்டைத் தமிழ் வள்ளல்கள் இரவலர்க்குக் கொடுத்த ஆடை இந்தக் காம்பின் சொலி மாதிரி இருந்தது என்று சிறுபாணாற்றுப்படை, புறநானூறு ஆகிய இலக்கியங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.


காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ-ப்
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி ...  (சிறுபாணாற்றுப்படை)


பாம்புரி அன்ன வடிவின, காம்பின்
கழைபடு சொலியின் இழையணி வாரா
ஒண்பூங் கலிங்கம் உடீஇ  (புறநானூறு 383)



இங்கே பாருங்கள் ... வள்ளலையும் அவன் கொடுக்கும் பரிசிலையும் பாராத மக்களுக்கு விளக்கிச் சொல்லும் நயத்தை! 


அந்தப் பழைய நாட்களில் மூங்கிலும் பாம்பும் காட்டுப் பொருள்கள். வள்ளல் தந்த பொருளோ நாட்டுப் பொருள். மூங்கிலையும் பாம்பையும் நன்றாக அறிந்த ஒருவருக்கு அவற்றின் மூலம் அவர் காணாத பொருள்களை விளக்கும் கவிதை நயம் சிறப்புடைத்தே. 


மூங்கிலின் சொலி அற்புதமானது. கண்டால் ஒளி ஊடுருவும் நுண்மை தெரியும். தொட்டால் மலரின் மென்மை தரும். அதைப் போன்ற ஆடை தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று நினைக்கும்போதே வியப்பும் மகிழ்வும் பெருமிதமும் ஏற்படுவது இயல்பே

சிறு பிள்ளைப் பருவத்தில் இந்த மூங்கில் சொலியைப் பார்த்தும் தொட்டும் மகிழ்ந்த பேறு எனக்கு இருந்தது. ஆகவே இந்தப் பெருமிதம். 


************************************** 

இப்போது பல நாட்களாக மாம்பருப்புத் துவையல் செய்ய விருப்பம். மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை உடைத்து அதன் துவர்ப்புச் சுவையை நுகர்ந்தது பிள்ளைப் பருவத்தில். 

அண்மையில் 2 மாம்பழம் வாங்கினேன். வெளிநாட்டு மாம்பழத்திற்கேற்ற சுமாரான சுவை. கொட்டையை எடுத்து உலர வைத்தேன். நன்றாக உலர்ந்த கொட்டையை உடைத்து உள்ளேயிருக்கும் பருப்பை எடுக்க முயன்றபோது ஓர் அதிசயம் காத்திருந்தது!














மூங்கிலின் சொலி போலவே, மாங்கொட்டையின் உள்ளேயும் அதன் சொலி இருப்பதைப் பார்த்தேன். அதே சொலிப்பு, பளபளப்பு, மென்மை, துவட்சி ... .


சரி. உள்ளே இருந்த மாம்பருப்பை என்ன செய்தேன்?






சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் புளி, 2 பச்சை மிளகாய், கொஞ்சம் உப்பு ... சேர்த்து அரைத்து எடுத்தேன். கல்லுரல் இல்லை, அதனால் துவையலாக இல்லை, சட்டினியாக வந்தது!




சுவையோ சுவை! கட்டாயம் செய்து சுவைக்கவும் -- துவர்ப்பு, புளிப்பு, உப்பு, உறைப்பு எல்லாம் தரும் இந்த மாம்பருப்புத் துவையல்.


மாஞ்சொலியின் அழகையும் கண்டு மகிழத் தவறாதீர்கள்!





Sunday, April 14, 2013

சுடோ சுடு ... வடை சுடு ...

வடை! தமிழ்நாட்டு உணவில் ஒரு முக்கியப் பங்கு இந்த வடை க்கு. பல வகை வடைகள் உண்டு. 


இங்கே மெதுவடை, உழுந்து வடை, உளுத்தம்பருப்பு வடை என்றெல்லாம் குறிக்கப்படும் ஒரு வகை வடை செய்யும் முறையைப் பார்ப்போமா.  


1. ஒரு சின்ன கிண்ணத்தில் உளுத்தம்பருப்பை (உடைத்த பருப்பு என்றாலும் சரியே) எடுத்து, நன்றாகக் கழுவி நல்ல தண்ணீரில் 1~2 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறவைக்கும் பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் இருந்தால் போதும். ஒரு மணிக்கூறு இடையில் தண்ணீர் வற்றிப்போவதுபோல் தெரிந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.



2. ஊறிய உளுத்தம்பருப்பை மேற்கொண்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.  கல்லுரல் வசதி இருப்பவர்கள் பாக்கியவான்கள், ஆசீர்வதிக்கப்படுவார்கள்! 

மாவு "கிள்ளு பதத்தில்" இருக்க வேண்டும். ரொம்ப ரொம்ப மெது வடை வேண்டுமென்றால் மாவு சிறிதே தளர்ந்து இருக்க வேண்டும்; ஆனால் வடை வட்டமாகத் தட்ட வாராது; பொரியும்போது எண்ணெயும் குடிக்கும். 

அரைத்த மாவு கொஞ்சம் ஈரப்பசையுடன் இதோ இப்படி இருந்தாலே போதும். மேலே இருக்கும் சிண்டு போன்றது பிள்ளையாருக்கு!  









3. மேலே காட்டிய மாவில் உங்கள் சுவைக்கு ஏற்றபடி உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.  உப்பு சேர்த்தவுடன் வடை மாவு கொஞ்சம் நீர்த்துப் போகும். அப்படிப் போனால் சிறிது நேரம் மாவைக் குளிர் பதனப் பெட்டியில் வைக்கலாம். அல்லது காகிதத் தட்டில் வைத்து ஈரத்தை உறிஞ்சச் செய்யலாம். 

கீழே உள்ள படத்தில் மேல் பக்கம்  உள்ள உருண்டை கிள்ளு பதத்தில் எடுக்கப்பட்டது. 





4.  ஒரு சிறு உருண்டை மாவைக் கிள்ளி எடுத்து, வட்டமாகத் தட்டவும். சாதாரணமாக இதை வாழை இலையில் அல்லது கையிலேயே தட்டுவது பழமை. புதுமை உலகில் plastic sheet அது இது என்று வந்துவிட்ட காலத்தில் என்ன செய்ய? 


4a. உள்ளங்கையில் வைத்துத் தட்டி ஒரு வட்டமான உருவை உண்டாக்கவும். அந்த வட்டத்தின் நடுவில் ஒரு துளை உண்டாக்கவும். 








4b. சோளக் கதிரின் மேல் தோல் (corn husk) இருக்கில்லெ, அதை எடுத்து அதில் வடை மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் துளை உண்டாக்கவும். இதுதான் மிகச் சிறந்த முறை. ஒட்டாமல் ஒடியாமல் வட்டமான மாவை எடுத்து எண்ணெயில் போடலாம்! 






5. வட்டமாகத் தட்டிய வடைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எந்த எண்ணெய் என்பது உங்கள் விருப்பம். தேங்காயெண்ணெயும் நல்லெண்ணெயும் நல்ல மொறு மொறு என்ற வடைகள் தரும்.  பிற எண்ணெய்கள் சூட்டுக்குத் தக்கபடி வடையின் நிறத்தையும் கடி பதத்தையும் மாற்றும். வேண்டும் பதத்துக்கு வடைகளைப் பொரித்து எடுக்கவும். 






வெளியில் மொற மொற உள்ளே மெது மெது வடைகள் தயார்! 




Thursday, January 24, 2013

கடலே, எம்மைக் காக்கும் துணையே ...

கடல் என்றால் அதன் சிறப்பு பலருக்கும் தெரியாது. கடற்கரை என்றால் பலருக்கும் அது ஒரு பொழுதுபோக்கும் இடமாகப் பயன்படுகிறது.  


அந்தக் கடல் வற்றினாலோ சீறினாலோ மக்களுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் உண்டாகும் துன்பம் பல.


நிலவகையால் பிரிந்திருக்கும் இடங்களை இணைப்பது கடல்தானே!

கொஞ்ச நேரம் ஒரு கடற்கரையில் ஒரு தனித்த இடத்தில் உட்கார்ந்து அந்தக் கடலையே பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் -- ஆன்மிகம் உங்கள் கையில் அடக்கம். வேறு வகைத் தியானம் தேவையில்லை. நம் உள்மனத்தை அப்படியே வெளிக்காட்டி உறவாடும் அந்தக் கடல்.

கடற்கரை மணலில் நடக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். இங்கே பக்கத்தில் மோன்டெரே (Monterey) கடற்கரையில் சில நாட்கள் செலவழிக்கும் பேறு கிட்டியது. அப்போது எடுத்த சில படங்கள் இங்கே.


1. இப்போதுதான் என் நாள் தொடங்குகிறது.  

 


2. இரவில் போன மீனவரோ யாரோ வீடு திரும்புகிறார்கள்.  




3. நடு மதியம். ஒரே குதூகலம்.


4. என் பாதுகாப்பாளர்.




5. அலுவலகம் போய்த் திரும்பும் அலுப்புடன் ...


6. அது சரீ, அவன் எங்கெ போய்த் தொலைஞ்சான்? அப்பா, அம்மா, மனைவியின் காத்திருப்பு ...

  

7. அவ எங்கெ போனா?

  

8. எல்லாரும் ஒங்க ஒங்க ஊட்டுக்குப் போங்க.
 


  
  
  

9. நான் குளிச்சிட்டுத் தூங்கப்போறேன். நாளெக்கிப் பாப்பம்.


Monday, January 14, 2013

பொங்கல் -- ஒரு சிறுதானியப் பொங்கல் ...

அரிசியில்தான் பொங்கல் செய்வது வழக்கம், இல்லையா?  

கொஞ்சம் மாற்றித்தான் ஒரு பொங்கல் செய்து பார்க்கலாமே என்று எப்பவுமே நினைப்பேன். முடிந்தபோதெல்லாம் அப்படியே செய்வேன், ஏதாவது ஒரு சிறுதானியத்தை வைத்து -- வெண்பொங்கலோ சர்க்கரைப் பொங்கலோ.
  
இந்த முறை ரொம்பச் சீக்கிரமாக, கையில் இருந்த ஒரு சிறுதானியத்தை வைத்துப் பொங்கல் செய்ய நினைத்தேன். அதன் விளைவே இந்தப் பதிவு.  

எப்போதுமே புதிய காய், கூல வகைகளைப் பார்த்தால் வாங்கிச் சமைத்துப் பார்த்துவிடுவேன். அண்மையில் ஒரு சிறுதானியம் என் கண்ணுக்குத் தென்பட்டது. இதன் தமிழ்ப்பெயர் எனக்குத் தெரியவில்லை. வெள்ளை வெளேர் என்று இருந்தது. இதை ஆங்கிலப் பெயரில் (Indian Sawa Millet) விற்பனை செய்கிறார்கள். படமும் பொங்கல் செய்முறையும் இங்கே:  
  
  
1. சிறுதானியம்
  

 
  
  
தொட்டால் ... பட்டுப்போன்ற மென்மை.

  
  
2. ஒரு சிறிய கிண்ணத்தில் அரைக்கிண்ணம் இந்த Indian Sawa Millet-ஐயும் ஒரு கால் கிண்ணம் பாசிப்பருப்பையும் எடுத்துக்கொண்டேன்.
  
3. வறுக்கக்கூட இல்லை. நன்றாகக் கழுவி இரண்டையும் ஒரு நல்ல பாத்திரத்தில் போட்டுக் குழைய வேகவைத்தேன்.  
  
4. நன்றாக வெந்த பிறகு, கொஞ்சம் சோயாப் பாலும் கொஞ்சம் வீகன் (vegan) சர்க்கரையும் சேர்த்துக் கிளறினேன்.
  
5. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு தேக்கரண்டி (teaspoon) அளவுக்குக் கலப்படமில்லாத மிக நல்ல தேங்காயெண்ணெய் (organic virgin coconut oil) ஊற்றிக் கிளறினேன்.
  
6. பொங்கல் பதத்துக்கு வந்ததும் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி, உலர்ந்த முந்திரிப்பழம் (raisins), பைன் கொட்டைகள் (pine nuts) சேர்த்தேன்.
  
7. அருமையான, சுவையான பொங்கல் கிடைத்தது! 



  
குறிப்பு: இதை வெண்பொங்கலாகவும் செய்யலாம். இங்கே, மக்கள் வழக்கமாகச் சேர்க்கும் பசும்பாலோ, நெய்யோ, எலும்பு மற்ற விலங்குப் பொருள் கலந்து தீட்டப்பட்ட (processed) சர்க்கரையோ சேர்க்கவில்லை. அரிசிச் சமையல் தரும் "திம்" "கம்" போல வயிற்றை உப்ப வைக்கும் கனம் இல்லை. செய்து, சுவைத்துப் பார்க்கவும்.

காய், காய், என்ன காய் செய்யலாம்? கழுதை கெட்டா ...

கழுதை கெட்டா ... குட்டிச்சுவர்! தெரியும்.

அதே போல ... என்ன சமைக்க? என்ன இருக்கு? என்று தேட நேரமில்லாமல் போகும்போது ... கைகொடுக்கும் தெய்வச் சமையல் -- ஒரு வகைக் கறி!

1. கொஞ்சம் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி எடுத்துக்கொண்டு தனியாகக் கடுகு தாளித்துச் சேர்க்கவும்:



2. வெந்த பயறு வகை ஒன்றை எடுத்துக் கொள்ளவும். இங்கே உள்ளது பின்ட்டோ பீன்ஸ் (pinto beans).
      (காய்ந்த பயிறு இருந்தால் ஊறவிட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதுவே இங்கே.)



3. பச்சைக் காய் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இங்கே பயன்படுத்திய காயின் பெயர் ப்ரோக்கலி (broccoli).


  
4. மேற்கண்ட பச்சைக்காய்த் துண்டுகளை மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும். குழையவிடவேண்டாம். பச்சை நிறம் மாறக்கூடாது.


5. தக்காளிக் கலவையில் பருப்பும் பச்சைக் காயும் சேர்த்துச் சிறிது நேரம் ( ~15 மணித்துளிகள்) வேகவைக்கவும்.



6. தேவையானால் சிறிது உப்பும் பெருங்காயமும் வதக்கிய இஞ்சியும் சேர்த்துக்கொள்ளவும்.

7. பச்சைக் கறிவேப்பிலை இதழ்களையும் சேர்க்கலாம்.

குறிப்பு: பருப்பும் (beans) ப்ரோக்கலியும் சிலருக்கு வாயுத் தொந்தரவு கொடுக்கலாம். அதனால் இஞ்சியும் பெருங்காயமும் சேர்ப்பது உதவும். பூண்டும் சேர்க்கலாம்.

சத்துள்ள உணவு. சப்பாத்தி, ரொட்டி, சோறு போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம். அளவோடு சுவைத்து உண்டு மகிழ்ந்து பயன் பெறுக!

Friday, December 21, 2012

காலக்கூறுகள் ... குறுக்கா? நெடுக்கா?

"காலம்" என்பது நம் வசதிப்படிப் பிரித்துக்கொள்ளும் ஏதோ ஓர் இயற்கைக் கூறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
  
தமிழ் இலக்கணத்தில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று வகைப்படுத்துகிறார்கள். பிற மொழிகளில் past, perfect, imperfect, preterite, pluperfect, future ... என்று அப்பப்பா, தலை சுற்றும் அளவுக்குப் பெயர்கள். அதெல்லாம் கிடக்கட்டும். இந்தப் பதிவு இலக்கணம் பற்றியதில்லை, பயந்துவிடவேண்டாம்! ;-)  

காலத்தைக் குறுக்காகப் (horizontal) பார்க்காமல், நெட்டுக்கா/நெடியதாக (vertical) ...   மேலே, நடுவே, கீழே என்ற வகையில் நான் பார்த்த சில காட்சிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன், அவ்வளவே.


மேலே ... உயிர்களை வாழவைக்கும் ஒளிச்சுடர் ...  நிலைக்காலம்/நிலைத்த காலம்/நிரந்தர காலம்



நடுவே ... எங்கூர்ப் பசங்க ... நிகழ்காலம் 



கீழே ... என் வீட்டு வாசலில் ... இறந்த காலம்


எல்லாம் இயற்கையே! 

பச்சை ஆலிவ் (raw green olive)

பச்சை (raw and green) ஆலிவ் -- என்ன செய்யலாம்?

பச்சை ஆலிவ் தெரியுமா? இதை ஆலிவ் காய் என்றுகூடச் சொல்லலாம்.

இதைப் பற்றித் தெரிந்துகொள்ள: http://en.wikipedia.org/wiki/Olive

ஏன் இதைப் பயன்படுத்தவேண்டும்? அட, ஆலிவ் எண்ணெயின் நன்மை தெரியுமே, அது ஆலிவ் காயிலிருந்துதானே? அந்தக் காயையும் பயன்படுத்திப் பார்க்கலாமே. எல்லாம் ஒரு மாற்றத்துக்குத்தான்.

 
பச்சை ஆலிவ் (raw green olives), கழுவி, உப்பு நீரில் ஊறுகின்றன. ஒரு நாள் ஊறவிடவும்.



ஒரு நாள் ஊறிய காய்களை எடுத்துத் தண்ணீரில் கழுவி, ஒரு திடமான கரண்டியின் பின் பகுதியாலோ சின்னஞ் சிறிய கல் உலக்கையாலோ (pestle) தட்டி, கொட்டைகளைப் பிரித்து எடுத்து, காயை வேகவைக்கவும். கொட்டைகள் பேரீச்சம்பழக் கொட்டைகள் போல இருக்கும். காய் சீக்கிரம் வெந்துவிடும்.

 
நறுக் நறுக் என்று கடிபதமாக இந்தக் காய்கள் வெந்ததும், அல்லது தேவையான அளவுக்குக் குழைந்ததும், தனியே எடுத்து வைக்கவும்.

கொஞ்சம் தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் (காரம் தாங்குதலுக்கு ஏற்ப) ... எல்லாவற்றையும் சிறிதளவு ஆலிவ் எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். (உப்புச் சேர்க்கத் தேவையில்லை. வேண்டுமென்றால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். ஆலிவ் காயின் கசப்பு இந்த உப்புச் சுவையில் மறைந்துவிடாமல் இருந்தால் நல்லது!!! )


பிறகு, வெந்த ஆலிவ் காய்களைச் சேர்த்துக் கொஞ்சம் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

 


ஆலிவ் காய்களின் கசப்பைப் பற்றிய தயக்கம் இருந்தால் கொஞ்சம் மாங்காய் அல்லது மாம்பழத் துண்டுகளைக் கலந்துகொள்ளலாம்.



எல்லாவற்றையும் சிறிது வதக்கிக் கலந்தால் ... சுவையான ஆலிவ் கறி தயார்.


  
விரும்பினால், கொத்துமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

இது ஒருவகையான புதுச்சுவை தரும். சாதம் (குறிப்பாகத் தயிர் சாதம்), ரொட்டி, சப்பாத்தி போன்றவைகளுடன் சேர்த்துச் சாப்பிட அருமையான உணவு.