Friday, January 14, 2011

கம்போ? சாமையோ? ... இட்டிலியும் தோசையும்

இதன் தமிழ்ப் பெயர் சரியாகத் தெரியவில்லை, இது மில்லெட் (millet) என்று இங்கே கிடைக்கிறது.

http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=53

http://en.wikipedia.org/wiki/Millet

பெயர் எதுவானாலும் சரி, இது நல்ல சத்துள்ள பயிராகத் தெரிகிறது. இதற்குமுன் ஒரு முறை இதைச் "சாமை" என்ற பெயரில் தேங்காய்க் கலவையுடன் சேர்த்துச் செய்வது பற்றி எழுதியிருந்தேன்.

இந்த முறை இதையும் கருப்பு உளுந்தையும் வைத்துச் செய்த இட்டிலியும் தோசையும் மிகவும் நன்றாக அமைந்திருந்தன!

Millet-ஐக் "கம்பு" என்று சிலரும் "சாமை" என்று சிலரும் சொல்கிறார்கள். குழப்பமில்லாமல் இருக்கவேண்டி ... "மில்லெட்" என்ற பெயரையே இங்கே பயன்படுத்துகிறேன்.

***************************************

1. ஒரு கிண்ணம் முழுக் கருப்பு உளுந்து, இரண்டு கிண்ணம் "மில்லெட்" இரண்டையும் தனித் தனியே கழுவித் தனித் தனியே ஊறவைக்கவும்.

2. ஒரு தேக்கரண்டி அரிசிச் சோறு தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்.

3. உளுந்தும் மில்லெட்டும் நன்கு ஊறியபின் ... முதலில் ... கருப்பு உளுந்தைத் தோல் நீக்காமல் இட்டிலிக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.

4. மேலே சொன்ன உளுந்து மாவு அரைபட்டு, குமிழிகள் வரத் தொடங்கியதும் ... ஊறிய "மில்லெட்"டையும் ஒரு தேக்கரண்டி அரிசிச் சோறும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

5. இட்டிலி மாவு பதத்திற்கு அரைபட்டவுடன் தனியே எடுத்துப் புளிக்கவைக்கவும்.



6. மாவு புளிப்பது வீட்டிலும் வெளியேயும் இருக்கும் வெப்ப நிலையைப் பொருத்தது. குளிர் நாடுகளில் மாவு பொங்கினாலே மிகப் பெரிய வெற்றி!


7. பொங்கிய மாவை இட்டிலிகளாக வார்த்து எடுத்துக்கொள்ளவும்.

7a. வெளுக்காத மரநிறத் தாள் கிண்ணங்களில் (unbleached paper cups) மாவை வார்த்து எடுத்த இட்டிலி:



7b. துணியில் வார்த்து எடுத்த இட்டிலி:



8. தோசை வார்க்க விரும்பினால், இட்டிலிக்கு அரைத்த மாவில் சிறிது தண்ணீர் விட்டுக் கலந்துகொள்ளவும்.

9. நல்ல தோசைச் சட்டியில் மாவை வார்க்கவும்.



10. தோசைகளை மெல்லிதாகவோ, மெத்தென்றோ, முறுகலாகவோ வார்த்துக்கொள்ளலாம்.




குறிப்பு:
----------

1. இந்த இட்டிலி தோசைகளில் அரிசியின் அளவு மிகவும் குறைவு. வெப்பத்தினால் மாவு பொங்கிப் புளிக்குமானால், ஒரு தேக்கரண்டிச் சோறுகூடச் சேர்த்து அரைக்க வேண்டாம்.

2. தோசைக்கு எண்ணெய் ரொம்பத் தேவையில்லை. மேலே உள்ள படத்தில் முன் பகுதியில் இருக்கும் ஒரே ஒரு தோசை மட்டும் சிறிது எண்ணெய் விட்டு வார்த்தது. மற்றவை மெத்தென்றும் மெல்லியதாகவும் இருக்கும் பதம்.

2 comments:

  1. என் அம்மா வெல்லம் கலந்த கேப்பை (ராகி/கேழ்வரகு) அடை செய்வார்கள். அதை நினைத்துக்கொண்டு சப்பு கொட்டினேன்.

    ReplyDelete
  2. நினைப்பூட்டினமைக்கு நன்றி, 'இ' சார்! வெல்லம் போட்டு ஒருநாள் செய்தாப் போச்சு! :-)

    ReplyDelete