Saturday, August 20, 2011

குறும்(பு) பிள்ளைத் தமிழ் ...

பலருக்கு இன்றோ நாளையோ கோகுலத்தில் கண்ணன் பிறந்த நாளைக் கொண்டாடும் வாய்ப்பு ... .

"ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே ...
அர்த்த ராத்ரி நேரத்திலே அவதரித்தவனே ..."

என்ற பகுதியைக் கொண்ட "பாற்கடல் அலை மேலே ... பாம்பணையின் மீதே பள்ளி கொண்ட ரங்க நாதா! உந்தன் பதமலர் நிதம் பணிந்து ..."

என்ற பாடலுக்கு எங்கள் பாத்திமாக் கல்லூரி மாணவியர் உருவெடுப்புக் கொடுத்து நடனமாடியது மறக்க முடியாதது! அதை இயக்கிய ஒரு சின்னஞ் சிறிய பங்கும் எனக்குண்டு!

அந்தக் கோகுலக் கண்ணன் எப்படி இருந்தானோ? எனக்குத் தெரியாது.


எனக்குத் தெரிவதெல்லாம் பிறர் வாய்ச்சொல்லே. எனக்குப் புரிந்தது ... திமிர்த்தனமான ஒரு பிள்ளையின் செயல்களே.

கண்கண்ட தெய்வமாகக் காணும் இக்காலக் குழந்தைகளே அந்தக் "கோகுலக் கண்ணனின்"  மறு படிவங்கள், இல்லையா!

++++++++++++++++++++++++++++++++++++


உண்மையில் ... இன்று நான் எழுத நினைத்தது "தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே ..." என்று தொடங்கும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடல் பற்றி.

ஆனால் ... அந்த மீனாளே வந்து "என்னெப் பத்திச் சொல்றது நெறயப் பேருக்குத் தெரியும்; அது கெடக்கட்டும். கண்கண்ட தெய்வங்களைப் பத்தி இப்ப சொல்லு"-னு கட்டளையிட்ட மாதிரி ஒரு கனவு.

அதனால் சொல்கிறேன்.

+++++++++++++++++++++++++++++++

இந்தக் குழந்தை ரொம்பத் துடி! சும்மா சொல்ல முடியாது! அவ்வளவு துடி ... 3 வயதில்.  முதலில் பார்த்தபோது மிகவும் வெட்கம்; இரண்டு மூன்று முறை பார்த்தபின் நல்ல பழக்கம்.
  





அடம் பிடித்து அழுதபோது ... படம் எடுக்கப் போனபோது ... ஒரு மூலையில் இருந்த மரத்தூணில் புதைவிடம் தேடி முகத்தை மறைத்தது ஏன்? எப்படி இந்தக் குழந்தைக்கு அந்த நய நாகரிகம் தெரிந்தது?!



அப்றம் ... முதலில் பேசிய அது/அவள் என்னைப் பார்த்துச் சொன்னது, "ஒனக்குத் தோடு வேணும்."

அசந்துபோனேன்!

நான்: "அப்றம்?"

அவள்: "சங்கிலி வேணும்"

நான்: "அப்றம்?"

அவள்: "வளை வேணும்"

நான்: "சரி. நான் சொல்றேன். ஒனக்குக் காலுலெ கொலுசு வேணும்."

ஒரு மாதிரி விழிப்பு!

++++++++++++++++++++

ஒரு நாள் மதியம், தூங்கி எழுந்தவுடன் ஒரே அடம், அழுகையாம். கூட இருந்தவர் தாத்தா மட்டுமே. என்ன செய்வார் பாவம் அந்தத் தாத்தா!

ஏன் அழுகை என்று கேட்டதில் இந்தக் குழந்தை சொன்னதாம், "செயின் வேணும்" என்று.

தாத்தாவும் தனக்குத் தெரிந்த அளவில் வீட்டில் கிடைத்த ஒரு செயினை (கழுத்துக்குச் சங்கிலி) எடுத்துக் கொடுக்க ...

"இது இல்லெ" என்று ஒரே அழுகையாம் -- "நீலமா வேணும்" என்று கேட்டு.

பாவம், தாத்தா. என்ன என்னவோ எப்படியோ பேசியும் கொஞ்சியும் பார்த்தும் அழுகை தீரவில்லையாம்.

தணிக்க முடியாத அழுகை!

நேரம் சென்று வீட்டிற்கு வந்த நாங்களும் கேட்டுப் பார்த்தும் அவள் விருப்பம் என்ன என்று தெரியவே இல்லை. என்ன என்னவோ கேட்டும் கொஞ்சியும் பார்த்தும் அழுகையும் அடங்கவில்லை.

அவள் கனவில் கண்ட "செயின்" எது என்று யாருக்கும் புரியவும் இல்லை.

ரொம்ப நேரம் கழித்து ... வேறு ஏதோ ஒரு விளையாட்டுப் பொருள் அவள் கவனத்தை வேறு எங்கோ திருப்பியது ... நல்ல வேளை நாங்கள் பிழைத்தோம்!

ஊருக்கு நான் புறப்பட்டபோது ... அது படுத்திய பாடு ... அப்பப்பா! என்னை எப்படியெல்லாம் இழுத்தடிக்க முடிந்ததுவோ அவ்வளவும் செய்தது ...







கடவுளே! "எதோ ஒரு செயினைக் கனவில் கண்டு அதுதான் வேணும் என்று அடம் பிடித்த இந்தப் பெண் தன் கனவில் எவனோ ஒருத்தனைப் பாத்து 'இவன்தான் எனக்குக் கணவன்; இவனைக் கண்டுபிடித்துக் கொண்டுவா' என்றால் என்ன செய்வீர்கள். கொஞ்சம் விழிப்பாகவே இருங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தேன் -- என்னால் ஆனது.




3 comments:

  1. அம்மா இந்தக் காலத்து குழந்தைகள் எனக்கு தெரிந்து மிகுந்த சமத்துக் குழந்தைகள்தான் . கொஞ்சம் பிடிவாதம் அதிகம் அவ்ளோதான்

    ReplyDelete
  2. மறைமூர்த்தி கண்ணனை பற்றிய இந்த சித்திர கிருஷ்ணாயணம் எனக்கு ஶ்ரீராமனை நினைவுறுத்தியது. அவன் நனவில் கேட்ட நிலாவும், அதை பிரதிபலித்து ஏமாற்றிய சுமந்திரனும் என் கனவில்/நனலில் வந்தார்கள்.

    ReplyDelete
  3. அருமையான நினைவுகள் அம்மா. கிருஷ்ண தேவராயரின் மகன் யானையைப் பானையில் அடக்கச் சொன்ன கதை நினைவில் வருது. அல்லது தெனாலிராமனின் குழந்தையா?? யாரோ ஒருத்தர்! :D சின்னக் குழந்தை எப்போ, எதுக்கு, ஏன் அழறானு யாருக்கும் புரிஞ்சுக்க முடியாது.

    ReplyDelete