Thursday, January 13, 2011

ஆரஞ்சுப் பருப்பும் ... பச்சை ஆப்பிலும்...

ஆரஞ்சு நிறப் பருப்பு -- மசூர்/மைசூர் பருப்பு (masoor dal) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும்.  கிடைத்தால் ... செயற்கை உரம் போடாத [organic] பருப்பு வாங்கிக்கொள்ளவும்.

பச்சை ஆப்பில் -- Granny Smith ஆப்பில் என்று இங்கே கிடைக்கிறது.
(மேல் விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Granny_Smith )


பச்சை ஆப்பிலை நல்ல காய்ப் பக்குவத்தில் வாங்கிக்கொள்ளவும். செயற்கை உரம் போடாத [organic] காயாக இருந்தால் தோலோடு பயன்படுத்தலாம். பச்சை மாங்காய் இல்லாதபோது இந்தப் பச்சை ஆப்பிலைவைத்துச் சில உணவுப் பொருள்கள் செய்யலாம்.

ஆரஞ்சுப் பருப்பு, பச்சை ஆப்பில் இரண்டிலும் பல வகைச் சத்து உண்டு.


1. பருப்பை ஒரு சிறிய கோப்பை அளவு எடுத்துக்கொள்ளவும்.





2. ஒரு பச்சை ஆப்பிள் எடுத்துக்கொள்ளவும்.




3. பருப்பைக் கழுவி ஒரு பங்குக்கு ஒன்றரைப் பங்கு அளவுத் தண்ணீரில் வேகவைக்கவும். பாதியளவு பருப்பு நிறம் மாறினவுடன் அடுப்புச் சூட்டை நிறுத்திவிடவும். 5 மணித்துளி கழித்து வெந்த பருப்பைத் தனியே எடுத்துவைத்துக் கொள்ளவும்.



4. ஆப்பிளைக் கழுவி வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும்.



5. ஆப்பில் வில்லைகளில் பாதி அளவைத் தனியே எடுத்துக் குளிர் பதனப் பெட்டியில் வைக்கவும். (இதைப் பச்சையாக எலுமிச்சைச்சாறும் மிளகாய்த்தூளும் கலந்து ஊறுகாய் போடலாம். )

6. ஒரு நல்ல பாத்திரத்தில் கடுகு, சீரகம், மிளகாய் வத்தல் (2~3), மஞ்சள் பொடி ... இவைகளைத் தாளிக்கவும்.

7. மேற்சொன்ன தாளிப்பு முடிந்ததும் அடுப்புச் சூட்டை நிறுத்தி, மீதியுள்ள ஆப்பில் வில்லைகளைத் தாளிப்பில் சேர்த்துக் கிளறி எடுத்துக்கொள்ளவும்.



8. இந்தத் தாளிப்புக் கலவையில் பாதியைப் பருப்புக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். பச்சைக்கொத்துமல்லித் தழை சேர்க்கவும். மிகச் சிறிதளவு உப்புச் சேர்க்கவும்.




9. ஆப்பில் தாளிப்புக் கலவையில் மீதியை (சோய்) தயிர்ச் சோற்றில் கலந்துகொள்ளலாம்.


****************************************


குறிப்பு:
----------
ஆப்பிலை வில்லைகளாக நறுக்காமல் சதுரத் துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளலாம். எப்படியானாலும் ... ஆப்பிலை ரொம்ப நேரம் சுட வைக்க வேண்டாம்; வைத்தால் ... அதன் "நறுக்" என்ற மெல்லும் சுவை கெட்டுப்போகும். பச்சை நிறமும் மாறிப்போகும்.

பருப்பைக் குழையவும் வேகவைத்துக்கொள்ளலாம். பருப்பு நீர்க்க இருப்பது விருப்பமானால் அதற்குத் தகுந்த அளவு கூடுதல் தண்ணீர் சேர்த்து வேகவைக்கலாம். இந்தப் பருப்பு, பயத்தம்பருப்பை ("பாசிப்பருப்பை") விட வேகமாக வெந்துவிடும். அதிக நேரம் வேகவைத்தால் பருப்பின் நிறம் மாறிவிடும். அதனால் இதை நான் ரொம்ப நேரம் வேகவைப்பது இல்லை. எனக்கு இயற்கை நிறமும் சத்தும் பிடிக்கும்!

3 comments:

  1. எனக்கு தெரிந்தவரை மசூர்/மைசூர் பருப்பு (masoor dal) சாப்பிடவேண்டாம் என்று, ஆதாரங்களுடன் அரசு அறிவுரை இருக்கிறது. தவறு என்றால், கீதா சொல்லிவிடுவார்கள்.

    ReplyDelete
  2. அது ஏன், கீதா? கலப்படத்தினாலா? இங்கே நல்ல பருப்புக் கிடைக்கிறது.

    ReplyDelete
  3. மசூர்ப் பருப்பு கலப்படத்தினால் தான் அம்மா பயன்படுத்துவது சரியில்லை. ஆனால் ராணுவ ரேஷனின் நல்ல மசூர்ப் பருப்பு கிடைக்கும். அது நாங்கள் சாப்பிட்டிருக்கோம். பச்சை ஆப்பிள் அப்படியே சாம்பாரில் போடுவேன்! :)))) அதோடு சீவித் தொக்குத் தான் நிறைய. மெம்பிஸில் அந்தத் தொக்கை அமுலுக்குக் கொண்டு வந்தது நான் போய்ச் சொல்லித் தான். இப்போ எல்லாரும் நீங்க சொல்றாப்போல் துண்டம் போட்ட ஊறுகாயும் செய்யறாங்க. தொக்கும் போடறாங்க. :)))))

    ReplyDelete